states

சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக கைது வாரண்ட்!

லக்னோ, ஜன. 13 - உ.பி.யில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு, 8 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில் தற்போது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உத்தரப்பிரதேச தேர்தலில் அகிலேஷ் யாதவுக்கு எதிராக, இதர பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை கைப்பற்றுவதற்கு சுவாமி பிரசாத் மவுரியாவை, பாஜக நம்பியிருந்த நிலையில், அவர் திடீரென கட்சியை விட்டு வெளியேறினார். இது பாஜக தலைமையை அதிர்ச்சியிலும், ஆத்திரத்தி லும் தள்ளியுள்ளது. இதனால் மவுரியாவுக்கு எதிராக 8 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கை கையில் எடுத்துள் ளது. சுவாமி பிரசாத் மவுரியா, கடந்த 2014-ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். அப்போது, “திருமண நிகழ்ச்சிகளில் விநாயகரையும், கவுரியையும் வணங்கக் கூடாது. இது தலித் மக்களை அடிமைப்படுத்த, ஆதிக்க சாதியினர் ஏற்படுத்தி வைத்த நடவடிக்கை” என்று பேசியிருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், முன்பே இந்த வழக்கில் மவுரியாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2016-இல் அலகா பாத் உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் மீது இடைக்காலத் தடை பிறப்பித்தது. தற்போது மவுரியா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக-வுக்கு முழுக்குப் போட்டுள்ள நிலையில், அவருக்கு சுல்தான்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.