states

img

தெலுங்கானா முதல்வரும் பாகிஸ்தான், சீனா ஏஜெண்ட்டாம்!

ஹைதராபாத், பிப். 15 - பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதாக மோடி அரசு கூறிவரும் நிலையில், “அதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்த அசாம் பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா, இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டிருக்கிறோமா?” என்று தரம்தாழ்ந்து விமர்சித்தார்.  “ராகுல் காந்தி ஒருபோதும் ராணுவத்தை கேள்வி கேட்கவில்லை; அவரது குடும்பத்தினர் இந்த நாட்டிற்காக உயிரையே தியாகம் செய்தவர்கள். ஹிமந்தா பிஸ்வா சர்மா-தான் சுயநினைவை இழந்து விட்டார்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.  இதேபோல தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

“சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்களை ராகுல் காந்தி கேட்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது? நானும் கூட அதைக் கேட்கிறேன். தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே?” என்றதுடன், “ராகுல் காந்தியின் தந்தை கொல்லப்பட்டார். பாட்டி கொல்லப்பட்டார். அவருடைய தாத்தா நேரு நாட்டிற்காக சிறை சென்றார். அசாம் பாஜக முதல்வரால் இதுபோன்று சொல்லிக் கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பான இந்திய ராணுவத்தின் வீடியோவைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஹிமந்தா பிஸ்வா சர்மா, அந்த வீடியோவுக்கு கீழே, “புல்வாமா நினைவு நாளன்று, நமது ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயலில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

கே. சந்திரசேகர ராவ், காங்கிரஸ் குடும்பத்தின் மீது தனக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டத் துடிக்கிறார். ஆனால், எங்கள் விசுவாசம் எல்லாம் தேசத்தின் மீது தான். இந்திய ராணுவத்தை அவமதிப்பவர்களை புதிய இந்தியா சகித்துக் கொள்ளாது” என்று குறிப்பிட்டார். இதனிடையே, தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சயும், சந்திரசேகர ராவ் மீது பாய்ந்துள்ளார்.  “தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்திய ராணுவத்தை சீரழிக்கும் துரோகி போல் பேசுகிறார். பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஏஜெண்ட் போல் பேசும் உங்களைப் போன்ற துரோகி தெலுங்கானாவில் இருக்க தகுதி இல்லை. தெலுங்கானா மக்கள் உங்களை விரைவில் விரட்டியடிப்பார்கள்” என்று கொக்கரித்துள்ளார்.