பாலக்காடு, ஏப். 4- அட்டப்பாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட வழக்கில் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2018 பிப்ரவரி 22, அன்று நாட்டையே உலுக்கிய இந்த கொலை நடந்தது. இந்த வழக்கை அகளி போலீசார் விசாரித்து கடந்த மே 31ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 2022 மார்ச் 17 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கியது. இந்த வழக்கு இரண்டு முறை விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். கொலை நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது. முதல் குற்றவாளி உசேன், 2ஆவது குற்றவாளி மரய்கார், 3ஆவது குற்றவாளி ஷம்சுதீன், 5ஆவது குற்றவாளி ராதாகிருஷ்ணன், 6ஆவது குற்றவாளி அபுபக்கர், 7ஆவது குற்றவாளி சித்திக், 8ஆவது குற்றவாளி உபைத், 9ஆவது குற்றவாளி நஜீப், 10ஆவது குற்றவாளி ஜெய்ஜூமோன், 12ஆவது குற்றவாளி சஜீவ், 13 ஆவது குற்றவாளி சதீஷ், 14ஆவது குற்றவாளி ஹரீஷ். பிஜு மற்றும் 16ஆவது குற்றவாளி முனீர் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. மன்னார்காடு பட்டியல் சாதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம்.ரதீஷ்குமார் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகளுக்கான தண்டனை புதனன்று (ஏப். 5) அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு மார்ச் 18 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, ஆனால் 4,000 பக்கங்களுக்கு மேல் உள்ள தீர்ப்பின் மொழி பெயர்ப்பு முடிக்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டது. மதுவின் குடும்பத்திற்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 103 சாட்சிகளில் 24 பேர் பிறழ் சாட்சி ஆகிவிட்டனர்.
அட்டப்பாடி மது கொலை வழக்கு விவரம்
அட்டப்பாடியில் உள்ள சிந்தக்கி கிராமத்தைச் சேர்ந்த மல்லன் - மல்லி தம்பதியின் மகன் மது (30). மனநலம் பாதிக்கப்பட்ட மது, குடும்பத்தை விட்டு தனியாக காட்டில் வசித்து வந்தார். வனத்தை ஒட்டிய முக்காலியில் உள்ள கடையில் அரிசி மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்றதாகக் கூறி தேடினர். சம்பவத்தன்று வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற நபர், மது குகைக்குள் இருப்பதைப் பார்த்து முக்காலியில் இருந்து ஆட்களை அழைத்துள்ளார். அங்கு வந்த கும்பல் மதுவை விசாரித்து கொடூரமாக அடித்துக் கொன்றதாக வழக்கு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. மதுவின் கைகள் லுங்கியால் கட்டப்பட்டு, தலைக்கு மேல் அதிக சுமையுள்ள சாக்கு மூட்டையை வைத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள முக்காலி சந்திப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முக்காலியை சென்றடைந்த பிறகு மது அடித்தே கொல்லப்பட்டார். அந்த கும்பலில் இருந்த ஒருவர் பகல் 2.30 மணிக்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார். மூன்று மணிக்கு போலீஸ் வந்தது. மானநலம் பாதிக்கப்பட்ட மதுவை 3:30 மணியளவில் போலீஸ் ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மது ஜீப்பில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். 4.15 மணியளவில் அவர்கள் மருத்துவமனை சென்றடைந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் மது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மகிழ்ச்சி அடைவதாக சகோதரி
அட்டப்பாடி மது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் மதுவின் சகோதரி சரசு. இத்தகைய அடிமட்டத்தில் இருந்த எங்களால் போராடி வெற்றிபெற முடிந்தது. நீதிமன்றத்திற்கு நன்றி. விடுதலை செய்யப்பட்ட இருவரையும் தண்டிக்க மீண்டும் போராடுவேன் என்றார் சரசு. மதுவின் தாய் மல்லி கூறுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்றார். இந்த வழக்கில் அனைவரும் குற்றவாளிகள் என நம்பப்படுகிறது. இந்த வழக்கில் 2 பேரை விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வதாக மதுவின் தாயார் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இருவரும் பேசினர்.
அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்
அட்டப்பாடி மது கொலையில் நீதி கிடைத்துள்ளதாக பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்படும்போது, மதுவின் குடும்பத்தினருடன் இணைந்து மாநில அரசு நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் போராட்டம் வெற்றி பெறும் என்று அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.