states

img

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்பு

மக்களவை சபாநாயகர் அறிவிப்பு

புதுதில்லி, ஜூலை 26- மணிப்பூர் கலவரம் - வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நேரடியாக விளக்கம் அளிக்க மறுத்து வரும் நிலையில், மக்களவையில் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தில் ஓடி ஒளியும் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க வைக்கும் வியூகமாக, ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது  பற்றி “இந்தியா” கூட்டணி செவ்வாயன்று ஆலோசனை நடத்தியது.  எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தால் அலறிய அமித் ஷா, நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம்  குறித்து விவாதிப்பதில் ஒத்துழைப்பு அளிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் கார்கே உட்பட  அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் செவ்வா யன்று கடிதம் அனுப்பினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்

இந்நிலையில் காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய், மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது   நம்பிக்கையில்லா தீர்மானத்தை புதனன்று காலை 9:20 மணியளவில் முன்மொழிந்தார். பாரத் ராஷ்டிர  சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் ஆளும் பாஜக அரசு 5 மசோதாக்களை அறிமுகப்படுத்தி யது. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 12  மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியதும் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய் முன்வைத்த மோடி  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அனைவரும் ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். பாரத் ராஷ்டிர சமிதி கட்சியும் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்ப தாக அறிவித்த நிலையில்,  தொடர்ந்து மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

‘இந்தியா’ மீது ஏன் இத்தனை ஆத்திரம் மோடி அவர்களே!

புதுதில்லி, ஜூலை 26 - ‘இந்தியா என்ற பெயரின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏன் எத்தனை ஆத்திரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பி யுள்ளார்.  பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணி மணிப்பூர் விவகாரம் உட்பட நாட்டின் அனைத்துப் பிரச்சனை களையும் ஒன்றுபட்டு தீவிரமாக எழுப்பத் துவங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக நாடா ளுமன்றத்தில் இந்தியா கூட்டணி, பிரதமர் மோடி யின் மவுனத்தை கேள்விக்குள்ளாக்கி வருகிறது. அவரது அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது.  இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இக்கூட்டணிக்கு இந்தியா என்று  பெயர் வைத்திருப்பதை எரிச்சலுடன் விமர்சித்துள்ள பிரதமர் மோடி, “கிழக்கிந்திய கம்பெனி மற்றும் இந்தியன் முஜாகிதீன் எனும் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றின் பெயர்களில்கூடத்தான் ‘இந்தியா’ என்பது இருக் கிறது” என்று  கூறினார். இதற்கு அரசியல் அர ங்கில் கடும் எதிர்ப்பும் விமர்சனமும்எழுந்துள்ளது.  இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “இந்தியா என்ற  பெயரின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏன் இத்தனை ஆத்திரம்? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதற்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய மாபெரும் ராணுவத்திற்கு இந்திய தேசிய ராணு வம் என்று பெயர் என்பது தெரியுமா மோடி அவர்களே! அந்த இந்திய தேசிய ராணுவம் தான், பாரதம் எனும் இந்தியாவை விடுதலை செய்யப் போராடியது என்பதையும் அறிவீர்களா!” என்று கேள்விக்கணை தொடுத்துள்ளார். இதுமட்டுமல்ல, சமூக ஊடகங்களில் மோடிக்கு பலரும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். “சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்! மோடிக்கு தெரிந்த இந்தியா : இந்தியன் முஜாகிதீன், கிழக்கு இந்தியக் கம்பெனி ஆகியவைதான். ஆனால் ‘இந்தியா’ கூட்டணிக்கு தெரிந்த இந்தியா : இந்திய தேசிய ராணுவம், இந்திய விடுதலைப் போர் ஆகியவை” என்ற பதிவு பரவலாகியுள்ளது.

அடுத்த வாரம் விவாதம்?

“நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் விவாதித்து, விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கான சரியான நேரத்தை உங்களுக்குத் தெரிவிப்பேன்” என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.  நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டு 10 நாட்களுக்குள் விவாதம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டு ள்ளது. அதன்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அடுத்த வாரம் விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

5-வது நாளாக முடங்கிய அவைகள்

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 20, 21, 24, 25 ஆகிய 4 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கிய  நிலையில், புதனன்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 5-வது நாளாக நாடாளுமன்ற இரு அவை களும் முடங்கின. இரு அவைகளும் வியாழனன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

வடகிழக்கு மாநில எம்பிக்கள் தனி மனு

மணிப்பூர் பிரச்சனைகள் குறித்து விதி 176இன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்துமாறு  வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கரை  சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

ஒன்றிய அரசு கோரினால் மட்டுமே பதவி விலகுவேன் : பைரேன் சிங்

“மணிப்பூர் மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்து ள்ளனர். ஒன்றிய அரசு விரும்பும்போது மட்டுமே தனது பதவியை ராஜினாமா செய்வேன்” என மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் கூறியுள்ளார்.

“இந்தியா” எம்.பி.க்கள் கருப்பு உடை 

மணிப்பூர் பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “இந்தியா” கூட்டணியில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் வியாழனன்று “கருப்பு” நிற ஆடைகளை அணிந்து நாடாளுமன்றத்திற்கு செல்ல முடிவு  எடுக்கப்பட்டுள்ளது.