இந்தூர், ஜூலை 31- ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டவருக்கு 40 ஆயிரம் பக்கத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் தர்மேந்திர சுக்லா என்பவர் கொரோனா காலத்தில் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் கொள்முதல் தொடர்பான டெண்டர்கள் மற்றும் அவற்றுக்காக வழங்கப்பட்ட பணம் தொடர்பான விவரங்களை தருமாறு இந்தூர் தலைமை மருத்துவ அதிகாரியிடம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இக்கேள்விகளுக்கு 40 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் பதிலாக அளிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தர்மேந்திர சுக்லா , அவற்றை தனது காரில் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஆர்டிஐ கேள்விக்கு ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்காவிட்டால் பதில் தொடர்பான ஆவணங்களை இலவசமாக வழங்க வேண்டும், பக்கத்திற்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது விதியாகும். இந்நிலையில் தர்மேந்திர சுக்லாவின் கேள்விக்கு ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்கப்படாததால் ஆவணங்களை இலவசமாக வழங்க மேல்முறையீட்டு அதிகாரி சரத் குப்தா உத்தரவிட்டார். இதனால் 40 ஆயிரம் பக்க ஆவணங்களை தர்மேந்திர சுக்லா இலவச மாகப் பெற்று வந்தார். இதனால் மாநில அரசு கருவூலத்துக்கு ரூ.80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக சம்பந்தப் பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மருத்துவ அதிகாரிக்கு மேல்முறையீட்டு அதிகாரி யும் சுகாதாரத் துறையின் பிராந்திய இணை இயக்குநரு மான சரத் குப்தா உத்தரவிட்டார்.