தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக்கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் முந்த்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளது, அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் நெருப்பு பரவி புகை மண்டலம் சூழ்ந்ததில், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். சிலர் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிக்க முயன்றனர். தகவலறிந்து 24 வாகனங்களில் விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்த போராடினர். உள்ளே இருந்தவர்களை மீட்கவும் தீவிரமாக செயல்பட்டனர். எனினும் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 50 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.