states

திரிபுராவில் பாஜகவின் தேர்தல் பயங்கரவாதம்

நரசிங்கார் பஜார் (திரிபுரா), பிப். 14 - வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வரும் 16-ஆம் தேதி சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரம்  பிப். 14 செவ்வாய்க்கிழமையுடன் ஓய்ந்தது. திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கண்டு தீவிர மக்கள் சந்திப்பு  இயக்கம் மூலம் பிரம்மாண்ட பிரச்சாரத்தை நடத்தி யுள்ளது. இடதுசாரிகள் அணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுவதை பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் பாஜக தங்களது அதிகாரம் மற்றும் போலீசார் உதவியோடு இடது முன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி தேர்தல் பயங்கரவாதத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

உச்சக்கட்ட பதற்றம்

ஞாயிறன்று விமான நிலைய காவல் நிலையம் முன்பும், நரசிங்கார் பஜாரிலும் அமைதியாக பிரச்சாரம் மேற்கொண்ட இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் மீது பாஜகவினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். காவல்நிலையம் அருகில் இருந்தும் பாஜகவினரை போலீசார் தடுக்கவில்லை. மேலும் விமான நிலைய காவல்நிலையம் பகுதியில் இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் பிரச்சாரத்திற்குச் செல்லும் போதெல்லாம் பாஜக குண்டர்கள் இடை மறித்தனர். சில இடங்களில் பாஜகவினர் பைக் படைகள் மூலம் இடதுமுன்னணி காங்கிரஸ் ஊழியர்களின் பிரச்சாரத்தில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். இதனால் திரிபுராவில் உச்சக்கட்ட தேர்தல் பதற்றம் நிலவி வருகிறது.

உயர் அதிகாரிகளை காணவில்லை

திரிபுரா சட்டமன்றத் தேர்தலின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் உயர் அதிகாரிகள் யாரும் இதுவரை நேரடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் களமிறங்கவில்லை. தேர்தலுக்கு முன் பொறுப்பேற்ற பாதுகாப்பு அதிகாரி சமர் சிங் எங்கே இருக்கின்றார் என்பதே தெரியவில்லை. பதற்ற நிலையை போக்குவதற்கு சமர் சிங் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாஜக தலைவர்களுக்கு மட்டுமே பாதுகாப்புப் படை

பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள், மாநில பாஜக அமைச்சர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மட்டுமே பாதுகாப்பு படையினர் நாள் முழுவதும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரப் பாதுகாப்பு மற்றும் சாதாரண வாக்காளர்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகளைப் பார்க்க பாதுகாப்பு படையினருக்கு நேரம் கிடைக்கவில்லை. தற்போதே இப்படி என்றால் வாக்குப்பதிவு நாட்களில் பாதுகாப்பு இன்னும் மோசமாகுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இடதுமுன்னணி - காங்கிரஸ்  ஊழியர்கள் போராட்டம்

பாஜகவின் நிர்ப்பந்தத்தால் போலீசார் சுதந்திரமாக செயல்படமுடியாத நிலை இருப்பதாக ஏற்கெனவே சிபிஎம் குற்றம்சாட்டியிருந்தது. தற்போது போலீசார் முன்னிலையிலேயே பாஜகவினர் தாக்குதல் நடத்து வதும், தாக்குதல் நடத்தும் பாஜகவினரை கைது செய்யாமல், இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்களை கைது  செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. காவல்துறை யின் செயலற்ற தன்மையைக் கண்டித்து இடதுமுன்னணி - காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டாக விமான நிலைய காவல்நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தினர். 

பாஜக எம்எல்ஏ பணப்பட்டுவாடா

அரசியல் பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனது அதிகார பணபலத்துடன் மேற்கு திரிபுரா பாஜக எம்எல்ஏ கிருஷ்ணதன் தாஸ் அகர்தலாவில் உள்ள தனது வீட்டில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தது தொடர்பாக காணொலி ஒன்றும் வெளியாகியுள்ளது.