states

நாட்டின் இறையாண்மைதான் முக்கியம்

மெக்சிகோ சிட்டி, ஜூலை 25- எந்தவொரு உடன்பாடாக இருந்தாலும், மெக்சிகோவின் இறையாண்மை மற்றும் சுயமாக முடிவெடுக்கும் உரிமை ஆகியவற்றை விட மேலானதாக இருக்க முடியாது என்று மெக்சிகோவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்சிலோ இப்ரார்டு கூறியுள்ளார். மெக்சிகோவில் வலதுசாரிக் கட்சிகள் ஆட்சி யில் இருந்தபோது அமெரிக்கா-மெக்சிகோ-கனடா உடன்பாடு போடப்பட்டது. தற்போது ஜனாதிபதியாக இருக்கும் இடதுசாரித் தலைவரான அம்லோ (ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்) பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு  கொள்கை மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களால் மூன்று நாடுகளுக்கு இடையிலான உடன்பாட்டை மெக்சிகோ மீறுகிறது என்று அமெரிக்காவும், கனடாவும் குற்றம் சாட்டி வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மெக்சிகோ மறுப்பு தெரிவித்திருக்கிறது. அவற்றிற்கு மறுப்பு தெரிவிக்க வெளியுறவுத்துறையும், பொரு ளாதாரத் துறையும் தயாராகி வருகின்றன.  இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் மார்சிலோ இப்ரார்டு, ‘‘எரிபொருள் கொள்கை யில் நாங்கள் செய்துள்ள மாற்றங்கள் குறித்து  விமர்சனம் செய்திருக்கிறார்கள். எங்கள் இறை யாண்மை மற்றும் சுய உரிமை ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் எங்கள் பதில் இருக்கும். எந்தவொரு உடன்பாடாக இருந்தாலும் இவற்றை விடப் பெரியது இல்லை’’ என்று கூறியுள்ளார். இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்தபிறகு, தென் அமெரிக்க நாடுகளுடன் நல்ல உறவை மெக்சிகோ ஏற்படுத்தியுள்ளது. அதோடு, எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மெக்சிகோவின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பணிந்தால், மெக்சிகோவின் நலன்கள் பாதிக்கப்படும் என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.