வாஷிங்டன், மே 30- உக்ரைன் நெருக்கடியைக் காரணம் காட்டி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று அமெரிக்கக் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான பியூ கிராஸ்கப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், “கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை உக்ரைன் நெருக்கடியைக் காட்டி அதை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் முயல்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்தில் எண்ணெய்க்கான தேவை குறைந்ததால் வியா பாரம் குறைந்தது. தற்போது உக்ரைன் நெருக்கடியால் மீண்டும் தேவை குறைகிறது. அதிக விலைக்கு எண்ணெய் விற்று ஈடுகட்ட அமெரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன” என்றார். இதனால் அமெரிக்காவில் அத்தியா வசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. தங்கள் நிலைமை மோசமாகி இருக்கிறது என்று அமெரிக்க மக்கள் நினைக்கிறார்கள் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.
பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணி யான நேட்டோவில் இணைவதைத் தாங்கள் எதிர்ப்பதாக ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவரான ஷி கசுவோ, “அமைதிக்கு எதிராக இதுபோன்ற ராணுவக் கூட்டணிகள் அமைப்பதை அல்லது ராணுவ ரீதியான எதிர்வினைகள் ஆற்றுவதை நாங்கள் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டார். பின்லாந்தும், ஸ்வீடனும் நேட்டோவில் சேர விண்ணப்பித்துள்ளன.
அல்ஜீரியாவில் எண்ணெய் எடுப்பதற்கான உடன்பாட்டில் சீனாவின் சினோபெக் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் மற்றும் அல்ஜீரியாவின் சோனோடிராக் எண்ணெய் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்பாட்டின் மூலமாக 9 கோடியே 50 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் உற்பத்தியில் சீன நிறுவனம் பெரும் அனுபவம் வாய்ந்தது என்று கையெழுத்திட்ட பிறகு அல்ஜீரிய அமைச்சர் முகமது அக்ராப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.