ஜெனிவா, ஏப்.18- உக்ரைன் போர் எதிரொலியாக உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதி யினர் வறுமையிலும், பட்டினியிலும் தவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்ந்து 7-ஆவது வாரமாக நீடித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ராணுவ தளவாடங்களுடன் உக்ரைன் வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், செக் குடியரசு நாளிதழ் ஒன்றுக்கு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ‘‘உக்ரைனில் போர் நடந்து கொண்டிருந்தாலும் அது உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக வளரும் நாடுகளே அதிகளவில் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித்தார். உலகின் கோதுமை மற்றும் பார்லி தேவையில் 30 சதவிகிதத்தையும், சோள தேவையில் 20 சதவிகிதத்தையும், சூரிய காந்தி எண்ணெய்யில் 50 சதவிகிதத்தையும் உக்ரைனும், ரஷ்யாவும் மட்டுமே பூர்த்தி செய்து வந்ததாகவும், ஆனால் அது இப்போது தடைபட்டிருப்பதாகவும் குட்டரஸ் தெரிவித்தார். கச்சா எண்ணெய் விலை 60 சத வீதம் வரை அதிகரித்துள்ள நிலையில், எரி வாயு, உரங்கள் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செய லாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 170 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒருபகுதி யினர் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படும் சூழல் எழுந்துள்ளதாக கூறி னார். இதுபோன்ற சூழலில் பணக்காரர்கள் சொத்து மதிப்பு மேலும் பெருகி, ஏழைகள் மேலும் வறுமையில் வீழ்வதை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.