சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்பெ.சண்முகம் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் மாநில செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் நாளிதழின் பதிப்பாளரும், முதன்மைப் பொது மேலாளராகவும் தோழர். எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்கள் செயல்பட்டு வந்தார். அவர் 01.05.2022 அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்கள் விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளராக 1989 முதல் 1994 வரையிலும், அதன்பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராகவும், பணியாற்றி உள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற விவசாயிகளின் பிரச்சனைகளின் மீது பல கட்ட போரட்டங்களை திறம்பட நடத்தி வெற்றி கண்டவர். பல்வேறு கிராமப்புறங்களில் விவசாயிகள் சங்கத்தை கட்டுவதில் முழு மூச்சாக ஈடுபட்டவர். தாம் ஏற்றுக்கொண்ட பணியை செம்மனையாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவர். அவர் நேற்று (01.05.2022) மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியும் தெரிவித்துக் கொள்கிறோம்.