states

அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைக் குறிவைக்கும் உ.பி. போலீஸ்

நபிகள் நாயகத்தை சிறுமைப் படுத்திய பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஒரே காரணத்திற்காக 8 முஸ்லிம்களை உ.பி காவல் துறை கைது செய்து பயங்கரவாதிகளைப் போல சித்ரவதை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நூபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்த, அவதூறுக் கருத்துக்கு எதிராக தலைநகர் புதுதில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஜூன் 10 அன்று சிறுபான்மையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சகரான்பூரில் 8 பேர் உ.பி. காவல் துறையால் மிகவும் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டனர். உ.பி. காவல் துறை  அவர்களை 22 நாட்கள் காவல் நிலைய சிறைக்கொட்டடியிலே வைத்து தீவிரவாதிகளை நடத்துவது போல் நடத்தியது. பிறகு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு  எதிராக எந்த ஆதாரமும் போலிசாரால் சமர்ப்பிக்க முடியாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  காவல்துறையால் கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்குள்ளாகி பிறகு விடுவிக்கப்பட்டவர்களில்  ஒருவர் 19 வயது முகமது அலி, மரம் அறுக்கும் ஆலைத் தொழிலாளி. அன்று மதிய வேளையில் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகையை  சகரான்பூரில் முடித்துவிட்டு திரும்புகையில்  சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார்.  இரண்டு கைகளையும் விசாரணையில் போலீஸ் உடைத்ததோடு திரும்ப திரும்ப இரக்கமின்றி அடித்தார்கள்  என்று முகமது அலி கூறுகிறார்.

”நான் எந்த வன்முறையிலும் கல் வீச்சிலும் ஈடுபடவில்லை. என்னை விட்டு விடும்படி நான் பலமுறை கெஞ்சினேன். ஆனால் என் கைகள் உடைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. நான் 22 நாட்கள் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் அடைக்கப்பட்டேன் இரக்கமில்லாமல் கடுமையாக அடித்து உதைத்தார்கள். உணவு வழங்காமல் தீவிரவாதி போல் என்னை நடத்தினார்கள். குற்றமே செய்யாமல் 22நாட்கள் சிறையில் இருந்திருக்கிறேன். நான் தொலைத்த 22 நாட்களை யார் எனக்கு திருப்பி தருவார்கள்? தீவிரவாதி என்றும் தேச விரோதி என்றும் என் மீது சுமத்தப்பட்ட பழிகளை யார் நீக்குவார்கள்?”. என்று ‘நியூஸ்க்ளிக்’ செய்தியாளர்களிடம்  முகமது அலி வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

முகமது அலியோடு சேர்த்து 8 சிறுபான்மையினரை சிறைக் கொட்டடியில் வைத்து போலீசார் கடுமையாக லத்தியால் அடித்து உதைத்திருக்கின்றனர். பின்பு அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் போலீசாரால் சமர்ப்பிக்க முடியாததால் 8 பேர் விடுவிக்கப்பட்டனர்.  “இந்த நாட்டில் முஸ்லிம்களை துன்புறுத்துவதற்கு போலீசும் அரசாங்கமும் கற்களைக் கூட விட்டு வைப்பதில்லை. குடியுரிமைச் சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின்போதும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், முக்கியமாக போராட்டக்காரர்களுக்கு உணவளித்தவர்கள் கூட கைது செய்யப்பட்டனர். அதே நிலைதான் தற்போதும் நடந்தேறி இருக்கிறது. எங்களால் இரண்டு வேளை ரொட்டி துண்டுகள் வாங்குவது கூட சிரமமாக இருக்கிறது. எங்கள் குழந்தைகளை விடுவிப்பதற்கு வழக்கறிஞர்களுக்கும் மற்ற செலவுகளுக்கும் செலவு செய்து கொண்டிருந்தால் நாங்கள் எப்படி உயிர் வாழ முடியும்” என்று முகமது அலியின் தாயார் கேட்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட 8 பேரின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வன்முறை நடந்த ஜூன் – 10 அன்று வன்முறையில் ஈடுபடவில்லை எனவும், அதே நேரம் வேறொரு இடத்தில் இருந்ததற்கான சிசிடிவி ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து உள்ளூர் நீதிமன்றத்தில் அந்த 8 பேருக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லையென்று விண்ணப்பித்தனர். அதன்பின் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்கள்.

அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைக்கும் போக்கு

முகமது அலியைப் போலவே, முகமது ஆசிப்பும் அந்த நாளில் உ.பி. காவல் துறையின் அதிகாரத்திற்கு பலி கடாவாக்கப்பட்டவர் தான். வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு வெளியே வரும் போது, இரண்டு போலீஸ்காரர்கள் அவருடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி, எந்த கேள்வியும் கேட்காமல், சிசிடிவி பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு விடுவிப்பதாக கூறி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஏற்கனவே சில நபர்கள் காவல்நிலையத்தில் இருந்தார்கள். ஆனால், மாலை நேரத்திற்குள் 30 – 35 பேர் வரை சிறைக்கொட்டடிக்குக் கொண்டுவரப்பட்டனர். பத்து பேர் கொண்ட குழுவாக வெவ்வேறு அறைக்கு அனுப்பப்பட்டு, காவல் துறையால் அடித்து உதைக்கப்பட்டனர். அடிக்கும் போதே நிறைய மதரீதியான வன்மமான அநாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தினார்கள். எங்களை இழிவுபடுத்துவதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதை காணமுடிந்தது என்று பேசும்போதே அழுகையைக் கட்டுப்படுத்தமுடியாமல் கதறினார் ஆசிப்.

”சிசிடிவியின் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே என் சகோதரரை கைது செய்திருப்பதாகக் கூறிய காவல்துறை, பின்னர் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று பதிலுரைத்தது. அப்படியென்றால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் முதன் முதலாக ஏன் காவல்துறையினர் கைது செய்தனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். அப்படியே கைது செய்திருந்தாலும், அவரை ஏன் அடித்தார்கள்? எந்தவிதமான ஆதாரம் இல்லாமல் எவரையும் அடிப்பதற்கு காவல்துறைக்கு ஏதேனும் அதிகாரத்தை சட்டம் வழங்கியிருக்கிறதா? அல்லது அவர் ஒரு முஸ்லீமாக இருப்பதனாலேயே காவல்துறையால் குறிவைக்கப்பட்டாரா?” என்று ஆசிப்பின் சகோதரர் முகமது ஆரிப் கேள்வி எழுப்புகிறார். செய்யாத குற்றத்திற்காக 23 நாட்கள் சிறையில் கழித்துவிட்டு கடந்த ஞாயிறன்று ஜூலை 4 ஆசிப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய சிறுபான்மையின வழக்கறிஞர் நலச்சங்கத்துடன் இணைந்து இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான பாபர் வாசிம் நியூஸ்கிளிக் செய்தியாளரிடம் பேசுகையில், ”அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி அநியாயமாக குறிவைக்கப்படுகிறார்கள். காவல்துறையிடம் எந்தவிதமான ஆதாரமுமில்லாத போது, மிக மோசமாக அவர்களை அடிப்பதற்கான காரணம் என்னவாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அவர் கூறுகையில், முதன்மை நடுவர்மன்ற நீதிபதியின் வார்த்தைகளில், “சிறைக்கொட்டடியில் மனிதர்களை அடிப்பதற்கு காவல்துறைக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது” என்றும் கூறினார்.