states

img

நிலத் தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை : பாஜக பிரமுகர் உட்பட 6 பேர் கைது 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே நிலத்தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க பிரமுகர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளம் பகுதியில் வசித்து வருபவர் ஜேசுராஜ். இவரது சகோதரர் மரியராஜ், சகோதரி வசந்தா இருவரும் அதேபகுதியில் வசித்து வருகின்றனர். ஜேசுராஜ் வசந்தா பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களுக்கும் அதேபகுதியைச் சேர்ந்த உறவினர் அழகர்சாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட காலமாக நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பிரச்சினைக்குரிய இடத்தில் அழகர்சாமி ஏற்பாட்டில் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனையடுத்து ஆழ்துளை கிணறு அமைத்தது தொடர்பாக இரு குடும்பத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதலில் வாக்குவாதமாக இருந்த நிலையில் கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதில் ஜேசுராஜ், அவரது சகோதரர் மரிய ராஜ், சகோதரி வசந்தா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அழகர்சாமி அவரது மகன்கள் ராஜமணிகண்டன், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 2 பேர் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டுள்ள அழகர்சாமி பா.ஜ.க பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.