states

ஒரே நாடு, ஒரே மொழி என கூறுவோர் இந்தியாவின் எதிரிகள்: முதல்வர்

சென்னை, ஜூலை 30-  இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை. எனவே ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலச்சாரம் என்று கூறுபவர்கள் இந்திய மக்களின் எதிரிகள் என்றும் அந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சனிக்கிழமையன்று (ஜூலை 30) கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக, அவர் ஆற்றிய உரை வருமாறு: கடந்த ஏப்ரல் மாதம் கண்ணூரில் நடந்த சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான் வந்திருந்தேன். அப்போது கேரள மாநில அரசும், மக்களும் எனக்கு அளித்த வரவேற்பை இன்னும் மறக்க முடியவில்லை. நான் பேசி முடித்ததும் ‘ரெட் சல்யூட் - ரெட் சல்யூட்’ என்று சொல்லி எனக்கு அந்த மாநாடே வாழ்த்து தெரிவித்த காட்சி நெஞ்சில் நிழலாடி வருகிறது.

நேருவின் சகோதரத்துவம்!

கூட்டாட்சிக் கருத்தியலும் - விடுதலையால் பெற்ற உரிமைகளும் - அனைத்துவிதமான வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக் கூடியவராக இருந்த பிதமர் நேரு, பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார்.இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார். ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்துஅனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக சகோதரத்துவத்தை வலியுறுத்தினார்.

வலிமையான இந்தியா எது?

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் பிரதமர் நேரு. அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார். கூட்டாட்சி நெறிமுறைகளை அவர் அடிக்கடி பேசினார். பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார்.அது தொகுப்புகளாகவும் வெளியாகி இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும். கூட்டாட்சி, மாநிலத் தன்னாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம், சமூகநீதி இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் இந்தியாவைக் காப்பாற்றுவது ஆகும். இந்தியா என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல! பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.

அன்பும் மனித நேயமும்!

இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால், இங்கு எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது. காரணம், பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. இங்கு ஒற்றைப் பண்பாடு என்பது இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ - நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான்.

ஒன்றிணைவோம்!

ஒன்றிய அரசு கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள். இந்திய மக்களின் எதிரிகள். இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் நாடு மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.

மறுக்கப்படும் பேச்சுரிமை

பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில்- பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திமுக உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை! சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை.

இரட்டை ஆட்சி எடுபடாது!

புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும். அரசியல் நடத்தியாக வேண்டும். மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும் - இந்திய மக்களின் சகோதர உணர்வும் –இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன். 75 ஆண்டுகள் இந்தியாவைக் காத்த அரசியல் நெறிகளைக் காக்க ஜனநாயக சக்திகளோடு இணைந்து ஊடகங்களும் கருத்துப் பிரச்சாரத்தை தொடர வேண்டும். 75 ஆண்டுகளுக்கு முன்னால் மாநில முதலமைச்சர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, “மிக நீண்டகால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் இந்தியாவுக்கு ஜனநாயகமே பொருத்தமானது! இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது. அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நமது இந்தியாவை எந்நாளும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.