இந்திய நாடு வீரம் செறிந்த பல போராட்டங்களைக் கண்ட ஆண்டு 1946. ரயில்வே தொழிலாளர்களின் மாபெரும் எழுச்சி நடை பெற்ற ஆண்டும் அதுவே. வேலைநிறுத்த உரிமையை வலியுறுத்தி எழுச்சியுடன் செயல்பட்ட திருச்சி பொன்மலை பணிமனையைச் சேர்ந்த 7 தொழி லாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து துவங்கிய போராட்டம், தென்னக ரயில்வேயின் 300 நிலையங்களை இழுத்து மூட வைத்தது. ஒரு ரயில் கூட நகர முடியவில்லை. இந்தப் போராட்டத்தின் உச்சக் கட்டமாக 1946 செப்டம்பர் 5 அன்று பொன்மலை திடலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மீது மலபார் போலீஸ் படை நுழைந்து துப்பாக்கிச் சூடு பயங்கரத்தை அரங்கேற்றியது. தங்கவேலு(26), தியாகராசன்(28), ராஜு(26), ராமச்சந்திரன்(25), கிருஷ்ணமூர்த்தி(24) ஆகிய 5 இளம் தோழர்கள் பலியாகினர். அவர்கள் சிந்திய இரத்தம் இன்றும் பொன்மலையில் எதிர்கால வர்க்கப் போருக்கு உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கிறது.