பலவீனமானவர்கள் போராடுவதில்லை.
சற்று பலமானவர்கள்
சில காலம் போரிடுவர்.
அதற்கும் அதிக பலவான்கள்
பல காலம் போராடுவார்.
முற்றிலும் வலிமை கொண்டவர்களோ
முடிவு வரை போரிடுவர்.
இவை தவிர்க்க முடியாதவை.
சுரண்டல் அதிகரிக்கும்போது
பலர் சோர்ந்து விடுவர்.
அவனோ
அதிகரிக்கும் தைரியம் கொள்வான்.
தன் போராட்டங்களை தயாரிப்பான்.
கூலிப் பணத்திற்காக,
குடி தண்ணீருக்காக, தேநீருக்காக,
அதிகாரத்தை கைப்பற்ற
அவன்
சொத்தை நோக்கி கேட்பான்
எங்கிருந்து நீ வந்தாய்?
அவன்
தத்துவங்களை நோக்கி கேட்பான்
யாருக்கு நீ சேவை செய்கிறாய்?
எங்கெல்லாம்
குரல்கள் நெரிக்கப்படுகிறதோ
அங்கெல்லாம் அவன்
உரத்துப் பேசுவான்.
எங்கெல்லாம் அடக்குமுறை இருக்கிறதோ,
எங்கெல்லாம் தலைவிதி என்பதே
உரையாடலாகிறதோ,
அங்கெல்லாம் அவன்
அவற்றை தோலுரித்துக் காட்டுவான்.
அவன் அமரும் இடத்திலெல்லாம்
அதிருப்தியும் அவனுடனே
சப்பணமிட்டு அமர்கிறது.
உணவு சகிக்க முடியாததாகிறது.
அறையோ மிகக் குறுகலானதாகிறது.
எங்கெல்லாம் அவர்கள்
அவனை துரத்துகிறார்களோ
அங்கெல்லாம்
கொந்தளிப்பும் பின்தொடர்கிறது.
வேட்டைக் களத்தில் பதட்டம்
நிலைகொள்கிறது.
- மாமேதை லெனினை கவுரவிக்கும் விதமாக ஜெர்மனி கவிஞன் பெர்தோல்ட் ப்ரெக்ட் எழுதியது... தமிழில்: ரமணன்