states

நித்தி ஆசிரமத்தில் தங்கியிருந்த இளம்பெண்ணை காணவில்லை

திருவண்ணாமலை, ஜூன் 27- பெங்களூரைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார்.  2019ஆம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி, மூத்த மகள் ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். 2ஆவது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார். அதன்பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக காவல்துறையில் புகார் செய்தார். ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷூக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடினார். இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் அவரது மகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நாகேஷ் தனது மகளை மீட்டுத்தருமாறு திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்துறையினர் நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர். சோதனையில் அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது.

;