states

ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை, மே 13- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, 3ஆம் பருவத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் வரும் ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 20ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதே வேளையில் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற்றுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 20 ஆம் தேதிக்குப் பின் மீண்டும் எப்போது  பள்ளிக்கு வர வேண்டும், எத்தனை நாட்கள் விடுப்பு போன்றவை அப்போது தெரிவிக் கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்  தேர்வு, 3ஆம் பருவத் தேர்வு முடிவுகள் வரும் 31ஆம் தேதி அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.