states

‘நீட் தேர்வால் கிராமப்புற அரசு மருத்துவமனைகளை மூடும் அபாயம்’

அரியலூர், ஏப்.17 - அரியலூர் அண்ணாசிலை அருகில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பரப்புரை பெரும் பயண வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது: “நீட் தேர்வு வருவதற்கு முன்பு மாநில மொழி பாடத்தில் படித்த மாணவர்கள் 97 சதவீத மருத்துவ இடத்தை பெற்றனர். ஒன்றிய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் மூன்று சதவீத இடங்களை மட்டுமே பெற்றனர். ஆனால் நீட் தேர்வுக்கு பின்னால் ஒன்றிய கல்வி திட்டத்தில் படித்த மாணவர்கள் சுமார் 65 சதவீத மருத்துவ இடத்தை பெற்றுள்ளனர். இது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. 

மேலும் ஒன்றிய கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் நகரப்பகுதி மற்றும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பை முடித்து கிராமப்புறங்களில் மருத்துவ சேவை செய்ய முன்வருவார்களா? என்பது மிகப்பெரிய கேள்வி.  இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவச் சேவை கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும். ஒன்றிய அரசின் இந்த நீட் தேர்வு திட்டத்தால், 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் யாரும் வராத நிலை ஏற்பட்டு, கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும்.  

இதனையடுத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவரும் ஒன்றிய அரசு மருத்துவத்தையும் தனியாருக்கு விற்பனை செய்ய வாய்ப்புண்டு. அப்போது மருத்துவமனைக்கு உள்ளே செல்வதற்கே கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான், ‘நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை’ என தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திராவிடர் கழகம் பல்வேறு விழிப்புணர்வு பொதுக் கூட்டங்களை நடத்தி வருவது வரவேற்கத்தக்கது”. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் திராவிட கழக தலைவர் வீரமணி சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.