states

இலங்கை மக்களுக்கு உதவ அனுமதி அளித்திடுக!

சென்னை, ஏப்.29 - இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உத விடும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத் தில் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. வெள்ளியன்று (ஏப். 29) சட்டப்பேர வையில் இதுகுறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந் தார். அதில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உத விடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு அவர் களுக்குத் தேவையான அரிசி, பருப்பு,  பால் பொருட்கள் முதலிய அத்தியா வசியப் பொருட்கள் மற்றும் உயிர்  காக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை  அனுப்பி வைக்கத் தயாராக உள்ளது  என்றும்; இதற்கு ஒன்றிய அரசு தேவை யான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிற்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியிருக்கிறது. எனினும், இதுகுறித்து ஒன்றிய அரசிடமிருந்து எந்தவிதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படாத நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய மக்களுக்கு உத வக்கூடிய வகையில், உணவு மற்றும்  அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து, உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை கட்சி எல்லை களைக் கடந்து, கருணை உள்ளத்தோடு அனைவரும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய  மு.க.ஸ்டாலின்  ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’  என்பதைப் போல, நம்முடைய இரத்தத் தில், உணர்வில், வாழ்வில் கலந்த ஒரு  பிரச்சனையாக இலங்கைப் பிரச்சனை இருந்து வருகிறது. இலங்கையில்  வாழக்கூடிய ஈழத் தமிழர் நலன் கருதி அரசியல்ரீதியாகப் பல்வேறு முழக்கங் களை வெவ்வேறு காலக்கட்டங்களில் நாம் முன்வைத்திருக்கிறோம். காலச் சக்கரம் இலங்கை மக்களை அலைக்கழி த்து எங்கோ கொண்டு போய் நிறுத்தி விட்டது. இருப்பினும், இன்றைய நாள் மனிதாபிமான அடிப்படையில் நாம் கைகொடுக்க வேண்டும் என்பதே இந்த  அரசினுடைய நிலைப்பாடு ஆகும் என்றார் தற்போது இலங்கை நாட்டில்  ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அங்குள்ள  மக்கள் படக்கூடிய துன்பங்கள், துய ரங்கள் நம் அனைவருடைய மனதிலும் சோகத்தை உருவாக்கியிருக்கிறது. இலங்கை முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருக் கிறது. பெட்ரோல், டீசலுக்காக வாகனங் கள் பல மணி நேரம் வரிசையிலே காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற் பட்டிருக்கிறது. நாடு முழுவதும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. பல அத்தியா வசியப் பொருட்களுடைய விலை பன் மடங்கு உயர்ந்து கொண்டேபோகிறது. பேருந்துகள், ரயில்கள் ஆகிய போக்கு வரத்துச் சேவைகள் குறைக்கப் பட்டிருக்கின்றன. பல இடங்களில் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மலையகத் தமிழர்கள் பாதிப்பு  

இரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால், மலையகப் பகுதி களில் தேயிலை விளைச்சல் பாதிக்கப் பட்டிருக்கிறது என்ற தகவலும் நமக்கு வரு கிறது. இதனால், தேயிலைத் தோட்டங் களில் பணிபுரியக்கூடிய மலையகத்  தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். இலங்கை நாடு முழுவதும் உயிர்காக்கும் பல மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இரசாயன உரம் கிடைக்காதது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.   சாதாரணமாக 1200 ரூபாய்க்குக் கிடைத்த உர மூட்டை தற்போது 32,000  ரூபாய்க்கு விற்பனையாகிறது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன. பால் விலை, பால் பவுடர் விலை, உணவுப் பொருள் கள் விலை என அனைத்தும் பல நூறு மடங்கு உயர்ந்துவிட்ட காரணத்தால் பச்சி ளம் குழந்தைகளும் கூட துன்பத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு நம் நெஞ்சம் பதைபதைக்கிறது. மொத்தத்தில் இலங்கை மக்களின் வாழ்க்கை என்பது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. அண்டை நாட்டுப் பிரச்சனையாக இதை நாம் பார்க்க முடியாது. அங்கு யார் ஆட்சியில் இருக்கிறார்கள்; அவர்கள் எத்தகையவர்கள் எனப் பார்க்க இய லாது. அந்த நாட்டு மக்களுக்கு நம்மால் ஆன உதவியை நாம் செய்தாகவேண்டும்.

அனைத்து இன மக்களும்

இலங்கையில் இருந்து இத்தகைய செய்திகள் வந்ததுமே, ஈழத் தமிழ்  மக்களுக்கு நம்மால் ஆன அனைத்தை யும் வழங்குவோம் என்று அறிவித்தேன். பிரதமரை மார்ச் 31 ஆம் தேதி நேரிலே சந்தித்து வலியுறுத்தினேன். அப்போது அதனை அறிந்து இலங்கைத் தமிழர் தலைவர்களும், சில தமிழ் அமைப்பு களும் எனக்கு வைத்த கோரிக்கை, ‘’தனி யாகத் தமிழர்களுக்கு மட்டும் உதவி என்று அனுப்ப வேண்டாம்; இலங்கை மக்க ளுக்கு என்று பொதுவாக அனுப்புங்கள்; மக்களைப் பிரித்துப் பார்க்க வேண்டாம்;  அனைத்து இன மக்களும் சேர்ந்துதான் இந்த நெருக்கடியை அனுபவித்துக் கொ ண்டிருக்கிறோம்’’ என்று சொன்னார்.  அதைக் கேட்டபோது நான் நெகிழ்ந்து போனேன். இதுதான்தமிழர் பண்பாடு. “பகைவர்க்கும் அருள்வாய் நன்நெஞ்சே” என்பதைப் போல, இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இது  எடுத்துக்காட்டு. இந்த நிலையில், ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்காக நாம் உதவி கள் செய்தாக வேண்டும். அந்த வகையில்  பின்வரும் அத்தியாவசியப் பொருட் களை வழங்கலாம் எனத் தமிழ்நாடு அரசு முடி வெடுத்துள்ளது.

40ஆயிரம்டன் அரிசி 

முக்கியமாக, 40 ஆயிரம் டன் அரிசி; இதனு டைய ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 80 கோடி  ரூபாய்; உயிர் காக்கக்கூடிய 137 மருந்துப் பொருட்கள்; இதன் மதிப்பு 28 கோடி ரூபாய்;  குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர்; இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். இவற்றையெல்லாம் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுக்கும் நாம் வழங்க நினைக்கிறோம். இவற்றை மாநில அரசு நேரடியாக வழங்க முடியாது. ஒன்றிய அரசின் அனுமதியோடு இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வழியாகத்தான் வழங்க வேண்டும். ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார் வள்ளுவர். உதவி என்பதும் மனிதாபிமான அடிப்படையில் உடனடி உதவியாக இருக்க வேண்டும். காலத்தே செய்தால்தான் அது உதவி. இதனைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த எண்ணத்தை ஒன்றிய அரசுக்குச் சொல்லக்கூடிய வகையில் ஒரு தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்புவது காலத்தினுடைய கட்டளை என்று அரசு கருதுகிறது.எனவே  அனைத்து கட்சியினரும் இந்த தீர்மானத்தை  நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அனைத்துக்கட்சிகள் ஆதரவு

 முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மான த்தை ஆதரித்து எதிர்க்கட்சி  தலைவர் எடப் பாடி பழனிச்சாமி, துணைத் தலைவர் ஓ. பன் னீர்செல்வம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் செல்வப்பெருந்தகை (காங்), ஜி.கே. மணி (பாமக)  நாகை மாலி (சிபிஎம்), மாரிமுத்து (சிபிஐ)  சதன் திருமலைக்குமார் (மதிமுக), முகம்மது ஷாநவாஸ் (விசிக), நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜவாஹிருல்லா (மமக),  உள்ளிட்டோர் பேசினர்.

நாகை மாலி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகைமாலி, “கடந்த காலங்களில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் எப்படி  செயல்பட்டதோ அதேபோன்று, இலங்கை யில்  பசி பட்டினியால் துடியாய் துடித்துக்  கொண்டு இருக்கும் அந்த மக்களுக்கு மனி தாபிமான அடிப்படையில் நமது முத லமைச்சர் உதவி செய்ய முன்வந்தபோதும் ஒன்றிய அரசும் பிரதமரும் உதாசீனப்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது; இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என்று  கூறினர். அனைத்து கட்சித்தலைவர்களும் பேசிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.