சென்னை, மே 27- மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வழங்கினார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:- கடல் மீன்வளத்தை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜூன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1ம் நாளன்று தொடங்கி ஜூலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப் பட்டு வருகிறது மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன் பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத் தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000-வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000 வீதம் ரூ. 95 கோடி வழங்கப் படும். இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத் தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.