states

img

கோவையைப் புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம்

தென்னக ரயில்வேயில் சென்னைக்கு அடுத்த படியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் இருந்து வருகிறது. எனினும் கோவை ரயில் நிலையத்தில் பெரிய அளவில் எந்த கட்டமைப்பையும் மேம்படுத்தாமல் ஒன்றிய மோடி அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.  போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கேரளாவில் இருந்து வரும் சுமார் 26 ரயில்கள் கோவை ரயில் நிலையம் வராமல் போத்தனூர் வழியாக சென்று வருகின்றன. இந்த நிலையில் ஆலப்புழா-சென்னை, திருவனந்தபுரம்-தில்லி, கன்னியாகுமரி - திப்ரூகர், எர்ணாகுளம்- பாட்னா உள்பட கேரளாவில் இருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்படும் 6 முக்கிய ரயில்களை கோவைக்கு பதிலாக போத்தனூர் வழியாக இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பயணிகள் மற்றும் தொழிற்துறையினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட மக்களின் ரயில்வே துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்ந்து பல முறை முன்வைக்கப்பட்டாலும், அது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிப்பதில்லை.  கோவை - சேலம் பயணிகள் ரயில், இருப்புப்பாதை பராமரிப்பு என்ற பெயரில் மாதக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2007  ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கோவை பெங்களூரு இடையிலான இரவு  நேர ரயில் சேவை இப்போதுவரை வெறும் அறிவிப்பாகவே இருந்து வருகிறது.

 போத்தனூர், பொள்ளாச்சி வழியாக ரயில் சேவை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் ரயில் சேவை, கோவையிலிருந்து சென்னை எழும்பூருக்கு பொள்ளாச்சி வழியாக மேலும் ஒரு புதிய ரயில் சேவை என ஏராளமான கோரிக்கைகள் பலமுறை முன்வைக்கப்பட்டும் தற்போது வரை அவை ஒன்றிய மோடி அரசின் ரயில்வே நிர்வாகத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  வடகோவை ரயில் நிலையத்தில், இரவு நேர ரயில்கள் நிற்காமல் செல்வதால், கோவை மேற்குப் பகுதி மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இரவு நேர ரயில்களை வடகோவையில் நிறுத்த வேண்டுமென்ற சிறிய கோரிக்கையைக் கூட ஏற்காத மோடி அரசின் ரயில்வே நிர்வாகம், சாமானிய மக்களுக்கு பலன் இல்லாமல் அதிக கட்டணத்து டன் வந்தே பாரத் ரயில்களை இயக்குவதில் அரசு முனைப்பு காட்டுகிறது.   பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு ரயில் நிலையங்களை பிரித்து கோவையை தலைமை இடமாகக் கொண்டு தனிக்கோட்டம் அமைக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையையும் ஒன்றிய மோடி அரசின் ரயில்வே நிர்வாகம் காதில் வாங்காத நிலைதான் இப்போதுவரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்தான், ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்டு வளர்ச்சி யின் நாயகன் என வாயில் வடை சுட்ட - தொழில் நகரமான கோவையை நெருக்கடியில் தவிக்கவிட்ட - கார்ப்பரேட்டுகளின் கனவு நாயகன் மோடி பல்லடம் வருகிறார்… பராக்… பராக்... பராக்...