சென்னை, மார்ச் 26 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து 2022-ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய 4 பேரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். தாங்கள் விரும்பும் நாட்டிற்கு தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சாந்தன் உயிரிழந்தார். இதையடுத்து மீதமுள்ள மூவருக்கும் பயண ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது. இந்நிலையில், லண்டனில் வசிக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனது கணவருக்கு விசா, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகன் மனைவி நளினி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) விசார ணைக்கு வந்தது. அப்போது, முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை செல்ல, இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. அவர்கள் மூவரையும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு அனுமதி கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழக அரசு, ஒன்றிய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் 3 பேரும் ஒரு வாரத்துக்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இலங்கை அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதால், அடையாள அட்டை தேவையில்லை என கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.