இன்று காலை நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் கூட்டம்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் 29 வரை நடை பெறவுள்ள நிலையில், இதில், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனிடையே, அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் அத்துமீறிய விவ காரத்தை, எதிர்க்கட்சிகள் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் கிளப்பின. மோடி அரசு அனுமதி மறுக்கவே வெளிநடப்பிலும் ஈடுபட்டன. இந்நிலையில், புதனன்று காலை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். எல்லைப் பிரச்சனை, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை அவைகளில் எழுப்புவது பற்றி, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வை விரும்பாத மோடி அரசு!
நாடாளுமன்ற குழுக்களின் ஆய்வுக்கு மசோதாக்களை அனுப்பும் நடைமுறை 15-ஆவது மக்களவையில் 71 சதவிகிதமாக இருந்தது. அது தற்போது 17-ஆவது மக்களவையில் 13 சத விகிதமாக குறைந்துள்ளது. குறிப்பாக 2014-ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற குழுக் களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 14-ஆவது, 15-ஆவது மக்களவையில் 60 சதவிகிதம் முதல் 71 சதவிகித மசோதாக்கள், நிலைக் குழுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இது 16-ஆவது மக்களவையில் 27 சதவிகிதமாகவும், தற்போது நடைபெறும் 17-ஆவது மக்களவையில் 13 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது.
‘வராக்கடன் தள்ளியே வைக்கப்பட்டுள்ளதாம்’
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.1.65 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.59,807 கோடியை தள்ளு படி செய்துள்ளது. 2022-ஆம் நிதியாண்டில் ரூ. 19,666 கோடி, 2021-ஆம் நிதியாண்டில் ரூ. 34,402 கோடி, நிதியாண்டில் 2020-ஆம் நிதியாண்டில் ரூ. 52,362 கோடி, 2019-ஆம் நிதி யாண்டில் ரூ. 58,905 கோடி என கடந்த நான்கு ஆண்டுகளில் வங்கிகள் ரூ. 8.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன. இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில ளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை; கடன் தொகையை வசூலிப்பது ஒத்தியே வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ.4000 கோடி நிதி
கிராமப்புறங்களில் தற்போதுள்ள பொதுக்குழாய்களை பிடுங்கி எறிந்து விட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் இணைப்பு வழங்கி பின்னர் குடிநீருக்கு கட்டணம் வசூ லிக்கும் தந்திரம்தான், மோடி அரசின் ஜல் ஜீவன் திட்டம். இந்நிலையில், இந்த ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் கீழ் 2019-20, 2020-21, 2021-22 & 2022-23 ஆண்டுகளுக்கு 2022 டிசம்பர் 6-ஆம் தேதி நில வரப்படி ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரத்தை ஜல் சக்தித் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் வெளியிட்டுள்ளார். இதன்படி 2022-23 நிதியாண்டிற்கு தமிழ்நாட்டிற்கு ரூ. 4,015 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகையில் செலவிட்டது போக ரூ. 262.66 கோடி மீதமுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நெல் விவசாயிகளுக்கு ரூ.70,000 கோடி நிலுவைத் தொகை விடுவிப்பு?
2022-23-ஆம் ஆண்டு காரிப் பருவத்தில் 2022 டிசம்பர் 4-ஆம் தேதி வரை 339.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 29 லட்சத்து 98 ஆயி ரத்து 790 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல 187.92 லட்சம் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டு 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் குறைந்த பட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 21-ஆம் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, 97 சதவிகித நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியுள்ளது.
தமிழக சாய ஆலைகளை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு குழு
தமிழகத்தில் நாமக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுற்றுச்சூழல் துறை இணை யமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின்போது 25 ஆலைகளில் முறையான கழிவுநீர் வெளியேற்ற வசதி இல்லா தது கண்டுபிடிக்கப்பட்டது. சில ஆலைகளில் எதிர்மறை சவ்வூடுபரவல் முறை செயல்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. சில ஆலைகளில் சூரிய சக்தி ஆவியாதல் அமைப்பு முறை செயல்படா மல் இருப்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
3 ஆண்டுகளில் 16 லட்சம் சைபர் குற்றங்கள் பதிவு
கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 16 லட்சத்திற்கும் அதிகமான சைபர் குற்றச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளன; இவற்றில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சம்பவங்கள் மீது முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் ஒன்றிய உள்துறை இணைய மைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில்’ (www.cybercrime.gov.in) அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் எளிதாகப் பதிவேற்றலாம். இந்த இணையதளத்தில் பதிவாகும் சம்பவங்கள் அந்தந்த மாநிலத்திற்கு தானாகவே சென்று விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிர்பயா திட்டத்தின் கீழ் ரூ. 98.96 கோடி அளவிற்கே நிதி ஒதுக்கீடு
2019-2020 2020-21 நிதியாண்டுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிர தேசங்களுக்கும் “நிர்பயா நிதியின்” கீழ் ரூ. 98.86 கோடி நிதியை ஒன்றிய உள்துறை அமைச்ச கம் வழங்கியிருப்பதாக உள்துறை இணையமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மாநி லங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மனிதக் கடத்தல் தடுப்பு பிரிவை உருவாக்க இந்த நிதி உதவும். மேலும், இதன்மூலம் மனிதக் கடத்தலை தடுக்கவும், மனிதக் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் கும்பல்களை அடையாளம் காணவும், அவர்களின் தொடர்புகள் பற்றிய தகவல்களை சேகரிக்கவும், ‘உளவுத்துறை’ மற்றும் ‘கண்காணிப்பு’ பிரிவுகளை உருவாக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் பலி கோவில் விழாவிற்கு சென்று திரும்புகையில் பரிதாபம்
உதகை, டிச.13- மசினகுடி அருகே கோவில் விழாவிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியபோது காட் டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். இவர்களது உடல்களை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். நீலகிரி மாவட்டம், மசினகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீகூர் வனப்பகுதி யில் ஆனைகட்டி அருகே ஆணிக்கல் மாரி யம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாத பூஜைக்காக திங்களன்று இரவு எப்பநாடு, கடநாடு, சின்ன குன்னூர் மற்றும் பேரகனி பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். இதையடுத்து, கோவிலிலிருந்து பொது மக்கள் கெதறல்லா ஆற்றில் ஐனீஸ் தரைப் பாலம் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த னர். அப்போது திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சரோஜா (65), வாசுகி (45), விமலா (35), சுசீலா (56) ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் மேற்குறிப்பிட்ட நான்கு பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரம் ஆனதால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து செவ்வா யன்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடைபெற்றது. இதில், நான்கு பேரின் உடல்களும் உயிரிழந்த நிலையில் மீட் கப்பட்டன. இதன்பின், பிரேத பரிசோத னைக்காக உதகை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கோவில் விழாவிற்கு சென்ற 4 பேர் உயிரி ழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எலி மருந்துக்கு நிரந்தர தடை: அரசு உத்தரவு
சென்னை,டிச.13- தமிழ்நாட்டில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகை யில் அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள் ளது. இதன்படி nocrotophos, profenofos, acephate, profenofos + cypermethrin, chlorpyrifos + cypermethrin உள்ளிட்ட பூச்சிக்கொல்லிகளுக்கு 60 நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. மேலும் எலிகளை கொல்லப் பயன்படுத்தப்படும் மஞ்சள் பாஸ்பரஸ் என்ற ரடோல் பூச்சிக்கொல்லி மருந் திற்கு நிரந்தர தடையும் விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது.
வாரிசு அரசியல் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அமைச்சர் பொன்முடி
சென்னை,டிச.13- வாரிசு அரசியல் எல்லா கட்சிகளிலும் உள்ளது என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செவ்வாயன்று(டிச.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். ஒன்றரை ஆண்டுக்கு முன்பே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். கடந்த தேர்தலில் அந்த அளவுக்கு அவர் பணியாற்றினார்”என்றார். வாரிசு அரசியல் என்ற குற்றச் சாட்டு புதிது இல்லை. மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது தெரியும். சட்ட மன்றத்தில் 10 விழுக்காடு வாரிசுகள் இருப்பார்கள். வாரிசு அரசியல் எல்லா கட்சியிலும் உள்ளது” என்றும் அவர் கூறினார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு:பூந்தமல்லி நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்
சென்னை,டிச.13- கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக் 23 அன்று கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார். இதையடுத்து இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாருதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மா யில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் டிச.12 அன்று 6 பேரையும் கோவை சிறையிலிருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாது காப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். பிறகு, டிச.13 காலை புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலை யில் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி
சென்னை,டிச.13- கேரள மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 14 ஆம் தேதி முதல் 17 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் டிசம்பர் 17 வரைக்கும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தில் 5 பேர் வெட்டிக் கொலை: ஒருவர் தற்கொலை
திருவண்ணாமலை,டிச.13- திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் வசித்தவர் தொழிலாளி பழனி (40). இவரது வீட்டிலிருந்து செவ்வாயன்று(டிச.13) காலை யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தி னர் அங்கு சென்று பார்த்தபோது, பழனியின் மனைவி வள்ளி (37), மகள்கள் திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி, மகன் சிவசக்தி ஆகிய ஐந்து பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். தூக்கிட்டு நிலையில் பழனி இறந்து கிடந்தார். மேலும், மற்றொரு மகள் பூமிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து கிராமிய காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பூமிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறு சடலங் களையும் மீட்டு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சனை காரண மாக மனைவி மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு பழனி தானும் தற்கொலை செய்து கொண்டி ருக்கலாம் என முதற்கட்ட விசாரணை யில் தெரியவந்துள்ளது.
சரத் பவாருக்கு கொலை மிரட்டல்
மும்பை சில்வர் ஓக்கில் உள்ள என்சிபி தலைவர் சரத் பவாரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பை போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்த னர். அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 294 மற்றும் 506(2) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர். பவாரை கைத்துப்பாக்கியால் கொலை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிபுரா அமைச்சரின் வீடு முன்பு போராட்டம்
திரிபுரா பாஜக அமைச்சர் ரத்தன் லால் நாத்தின் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் 40 பேர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததாக போலீசார் தெரிவித்தனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், ஆசிரியர் பணி நியமனத்தை மாநில அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும், 10 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திகார் சிறையில் சிசிடிவிகளை நிறுவுங்கள்
திகார் சிறையில் தில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட ‘விஐபி மரியாதை’ குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி, சிறைக் கண்காணிப்பா ளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பரிந்துரைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது நிலையான சிறை நடைமுறைகளை வடிவமைக்கவும் இக்கமிட்டி பரிந்துரைத்தது. சிறையில் ஜெயினுக்கு மசாஜ் செய்வதாகக் கூறப்படும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்ததை அடுத்து கமிட்டி அமைக்கப்பட்டது.
வெறிநாய்களால் ரத்தான வகுப்புகள்
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட தெருநாய்கள் நடமாட்டம் உள்ளதால், கல்லூரியின் வழக்கமான வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. 5,000 மாணவர்கள் மற்றும் கிட்டத்தட்ட 700 ஊழியர்களின் பாதுகாப்பிற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக கல்லூரி முதல்வர் சுரேஷ் பாபு கூறினார். எனினும் தேர்வுகள்நடத்தப்பட்டன.
பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்திய மூடநம்பிக்கை
ஹைதராபாத் ராஜேந்திராநகரில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் எலுமிச்சை, மஞ்சள் மற்றும் மண் பொம்மைகளை பள்ளி வளாகத்தில் கண்டதையடுத்து, சூனியம் செய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலர் பள்ளிக்கு வந்து குறும்பு செய்ததாகக் கருதி, நிர்வாகமும் காவல்துறையும் சிசிடிவி காட்சிகளை சரிபார்த்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பெரும்பாலான மாணவர்கள், மூட நம்பிக்கை பரப்பப்பட்டதைத் தொடர்ந்து வீடு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
3 புலம்பெயர் தொழிலாளர் பலி
பெங்களூருவின் புறநகர் பகுதியில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்த னர். திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீடுகளுக்கு நடந்து சென்று கொண்டி ருந்த போது, இச்சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கோர விபத்தில் அவர்களின் உடல் உறுப்புகள் சாலை முழுவதும் சிதறியதாக கூறப்படுகிறது. சேதமடைந்த வாகனத்தை விட்டுவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.
மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கவேண்டும்
சிபிஐ(எம்) எம்.பி., ஜான் பிரிட்டாஸ் திங்கள்கிழமை மாநிலங்களவையில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சுகாதாரப் பொருட்களை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டார். “இது பள்ளி இடைநிற்றல் விகிதத்தை குறைக்கும்; பள்ளி இடைநிற்றல் விகிதத்திற்கும் வறுமைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது” என்று அவர் கூறினார். “உலகில் ஆண்கள் அல்லாதவர்களாக இருப்பதற்காக பெண்கள் உண்மையில் அதிக விலை கொடுக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
பேருந்து பள்ளத்தில் விழுந்து மாணவர்கள் காயம்
உத்தரப்பிரதேச மாநிலம் புடாவுன் மாவட்டத்தில் உள்ள பிசௌலி நகரில் பேருந்து சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் 12க்கும் மேற்பட்ட மாண வர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் நடந்தது. தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மும்பை - மஸ்கட் இடைநில்லா விமானங்கள்
விஸ்தாரா விமான நிறுவனம் மும்பை மற்றும் மஸ்கட் இடையே தினசரி, இடைநில்லா விமானங்களை அறிமுகப்படுத்தியது. தொடக்க விமானம் மும்பையில் இருந்து இரவு 8 மணிக்கு (IST) புறப்பட்டு இரவு 9:35 மணிக்கு மஸ்கட் வந்தடைகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஸ்தாரா கூறியுள்ளது.
5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
கர்நாடகாவில் 5 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, கர்நாடகாவில் முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டதாகவும், இரண்டு மாதிரிகள் எதிர்மறையாக இருப்பதாகவும் மாநில சுகாதார அமைச்சர் கே சுதாகர் தெரிவித்தார். அரசு நிலைமையை கவனமாக கண்காணித்து வருகிறது. என சுதாகர் மேலும் கூறினார். டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை பரப்பக்கூடிய ஏடிஸ் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுகிறது.
தேநீர் தேசிய பானம் ஆகுமா?
தேயிலையை இந்தியாவின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி பபித்ரா மார்கெரிட்டா ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், குஜராத்தில் இருந்து வடகிழக்கு வரையிலும், ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் தேநீர் கிடைக்கிறது. எனவே, அதை நம் நாட்டின் தேசிய பானமாக அறிவிக்க வேண்டும்” என்று மாநிலங்களவையில் மார்கெரிட்டா கூறினார். குடிமக்கள் தேநீருடன் தான் தங்கள் நாளைத் தொடங்குகிறார்கள் என்றார் அவர்.
பீகாரில் மதுவிலக்கு தொடரும்: நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு தொடரும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். மதுவிலக்கு காரணமாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறி னார். “மதுவிலக்கினால் சமூகம் பலன் அடைந்துள்ளது. இதனால் பெண்கள் பெரிதும் பயனடைந்தனர். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் குறைந்துள்ளன” என்று முதல்வர் கூறினார்.
இ-சிகரெட் விற்கக் கூடாது
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் இ-சிகரெட் விற்பனை செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தில்லி காவல்துறைக்கு தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. “காவல்துறையினர், அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்வார்கள்; மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று உயர்நீதிமன்றம் கூறியது. தடையை மீறி இ-சிகரெட்டுகள் விற்கப்படுவதாக இரண்டு வழக்கறிஞர்கள் பொதுநல மனு தாக்கல் செய்தனர். “இ-சிகரெட்டுகள், நீதிமன்றம் அமைந்துள்ள இடத்திலிருந்து 5 கிமீ சுற்றளவிலேயே கிடைக்கிறது” என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
நாடாளுமன்ற தாக்குதலின் 21 ஆண்டுகள்
21 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தை பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் போது உயிரிழந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் செவ்வாய்க்கிழமை மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
450 வகையான மருத்துவ பரிசோதனைகள் இலவசம்
ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைமையிலான தில்லி அரசு ஜனவரி 1, 2023 முதல் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது இலவசமாக வழங்கப்படும் மருத்துவ பரிசோதனைகளின் எண்ணிக்கை 212 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜீவ் அறக்கட்டளை மீது புகார்
சீனாவிடம் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை (ஆர்ஜிஎஃப்) பெற்ற பணம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியா-சீனா எல்லை மோதல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பியது என்று அமித் ஷா செவ்வாய்க்கிழமை கூறினார். 2005-2007ல் சீன தூதரகத்திலிருந்து இந்த அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி மானியம் கிடைத்ததாக அவர் கூறினார். இதன் காரணமாகவே அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்றார்.
அந்தமான் - நிக்கோபரில் நிலநடுக்கம்
அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.09 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் கடல் மட்டத்திலிருந்து 59 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. உயிர் சேதம் குறித்து இதுவரை அதிகாரிகளால் அறிவிக்கப்படவில்லை. இரண்டு நாட்களில் அப்பகுதியில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.