சென்னை,ஜன.27- சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாப்பது, பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறையை எதிர்த்தும், பட்டியலின மக்கள் பாதுகாப்பு - பஞ்சமி நிலங்களை மீட்பது, அதிகரித்து வரும் வேலையின்மையை தடுக்கக்கோரி தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறப்பு மாநாடுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: இன்றைய சூழலில் மக்கள் சந்திக்கும் முக்கியான பிரச்சனைகளில் சிறப்பு மாநாடுகள் நடத்தி, கோரிக்கைகளை ஒருமுகப்படுத்தி இயக்கம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் மோசமான கொள்கைகளின் காரணமாக மிகவும் நெருக்கடிக்குள்ளகியுள்ள சிறு-குறு, நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் வேலை உரிமை பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை வலியுறுத்தி கோயம்புத்தூரில் மார்ச் 5 அன்று மாநில அளவிலான சிறப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இதேபோன்று ஆணாதிக்க சமூக அமைப்பை எதிர்த்தும், பெண்கள்-குழந்தைகள் மீதான வன்முறைகளை ஒழித்திட மாநில அளவிலான சிறப்பு மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்துவது எனவும், சமூகத்தில் பட்டியலின மக்கள் மீதான தொடர் வன்முறைகளை தடுத்திடவும், பஞ்சமி நிலத்தை மீட்டிடவும், சாதி ஒழிப்பு, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து வாழ்ந்திட வலியுறுத்தி சிறப்பு மாநாடு விழுப்புரத்தில் நடத்துவது எனவும், அதிகரித்து வரும் வேலையின்மை, நீடித்து வரும் ஒப்பந்த முறை, தொகுப்பூதியம் - மதிப்பூதியம் முறைகளை ஒழித்திடவும், அவுட்சோர்சிங் முறையை அறவே ஒழித்திடவும், பணி நிரந்தரப்படுத்துவது, காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் சென்னையில் சிறப்பு மாநாடு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.