பெய்ஜிங், ஜூலை 13- சீனாவின் குவாங்டன் ஓப்போ கைபேசி தொலைத்தொடர்பு கழக நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா, 4,389 கோடி ரூபாய் சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது. இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைபேசி மற்றும் உதிரி பாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன் பிளஸ், ரியல்மி உள்ளிட்ட பல்வேறு கைபேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதனிடையே, ஓப்போ இந்திய அலுவலகம், அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வுத்துறை சோதனை நடத்தியது. அப்போது கைபேசியை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலை ஓப்போ இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓப்போ இந்தியா 4,389 கோடி ரூபாய் அளவுக்கு வரி விலக்கு பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் இறக்குமதியின்போது சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.