states

உலகச் செய்திகள்

தெற்கு சூடானில் புதிய காலரா நோய் பெரும் அளவில் பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தெற்கு சூடானின் சுகாதாரத்துறை எடுத்தது. அதையும் தாண்டி காலரா பரவி வருவதால் பரிசோதனைகளை சுகாதாரத்துறை அதிகப்படுத்தியுள்ளது. பொது மக்கள் பதற்றமடையாமல் அமைதியாக இருக்க வேண்டும். அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியும், பல ஆண்டுகளுக்கு அந்நாட்டு மக்களைக் கடுமையாகத் துன்புறுத்தியவருமான மார்கோசின் மகன் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த இவர் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

விண்வெளியில் அமைக்கப்பட்டு வரும் தனது ஆய்வு மையத்திற்கு சரக்கு விண்கலமான டியான்சோ-4ஐ சீனா அனுப்பியுள்ளது. விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நடப்பாண்டின் இறுதிக்குள் நிறைவு பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மையத்தின் பணிகளில் சீனாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடமளிக்காததால், தனியாக மையத்தை அமைக்கும் பணியில் சீனா இறங்கியது குறிப்பிடத்தக்கது.

கவலை தீர்ந்தது

டெஹ்ரான், மே 10- எண்ணெய் வர்த்தகம் பற்றிய கவலைகள் தீர்ந்தன என்று ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ராய்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் பதவியேற்றபோது இருந்த எண்ணெய் ஏற்றுமதியை விட தற்போது இரு மடங்கு அதிகமாக ஏற்றுமதியாகிறது என்று தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவின் கடுமையான தடைகளை மீறி இது நடந்துள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “எண்ணெய் வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளதால், எங்களுக்கிருந்த பெரும் கவலை நீங்கிவிட்டது” என்றார். எண்ணெய் வர்த்தகத்திற்கு இருந்த தடைகளை தளர்த்திவிட்டதாக அமெரிக்கா கூறியுள்ளதை ஈரான் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜாவேத் ஓஜி மறுத்துள்ளார். தடைகள் மேலும் அதிகரித்துள்ளன என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.