states

பன்மடங்கு கட்டணம் உயர்வு அண்ணா பல்கலை.க்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

சென்னை, மே 7- சான்றிதழ்களுக்கான கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம், கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும், 23 வகையான சான்றிதழ்களுக்கு பத்து மடங்கு கட்டண உயர்வை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகம் திடீரென நடவடிக்கை எடுத்துள்ளது மாணவர்களின் நலன், அவர்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் எடுத்த முடிவாகும். இந்நடவடிக்கையை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.  தற்போது கட்டணம் குறைவாக இருப்பதால்தான் அரசு கல்வி நிறுவனங்களில் ஏழை,எளிய கிராமப்புற மாணவர்கள் ஓரளவு கல்வி பெற முடிகிறது. அந்த வாய்ப்பையும் பறிக்கும் விதமாகவே இந்த அறிவிப்பு உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் உடனே அந்த அறிவிப்பை ரத்து செய்வதோடு கட்டணமின்றி சான்றிதழ்கள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.