states

எங்க பொழப்புல மண்ணி அள்ளி போட்டுட்டிங்களே மோடிஜி!

தலைநகர் சென்னையின் தியாகராய நகர் பகுதி என்பது அன்றாடம் பிழைப்புக்காக சாலை ஓரங்களில் ஜவுளி முதல் வீட்டு உபயோகம் மற்றும் அத்தியாவசிய, பேன்சி பொருட்கள், பூ, பழம், காய்கறிகள், மாலை, இரவு நேர கையேந்தி பவன் என்று அழைக்கப்படும் சிறு, சிறு உணவகங்கள் தொடங்கி ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் என மிகப்பெரிய நிறுவனங்கள் வரைக்கும் இயங்கக்கூடிய மிகப் பிரபலமான வியாபார பகுதியாகும். தினசரி பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்வதுடன் கோடிக்கணக்கில் வியாபாரம் நடப்பதால் தமிழ்நாட்டின் இதயம் என்றும் அழைக்கப்படுகிறது. ரோடு ஷோ - கெடுபிடிகள் பிரதமர் மோடி, செவ்வாயன்று மாலை இங்கு தான் ‘ரோடு ஷோ’ நடத்தினார். இதற்காக மூன்று நாட்களுக்கு முன்பே, முழுக்க முழுக்க அந்தப் பகுதி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது.

ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மோடி ஊர்வலமாகச் செல்லும் சாலைகளில் இரண்டு பக்கமும் இருசக்கர வாகனம் கூட நிறுத்துவதற்கு அனுமதி கிடையாது. வர்த்தக நிறுவனங்களும் முழுமையாக இழுத்து மூடப்பட்டன. சாலையோர வியாபாரிகள் இரண்டு நாட்களாக அந்தப் பக்கமே தலை காட்ட முடியவில்லை. அந்த அளவுக்கு கெடுபிடிகள்.  “பிரதமர் மோடி இப்போது வருவதை நாங்கள் யாரும் குறை கூறவில்லை. எங்கள் கேள்வி கடந்தாண்டு பெய்த கன மழையானது சென்னை மக்களை மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியதே. அப்போது நீங்கள் (பிரதமர்) எங்கே போயிருந்தீர்கள் என்பதுதான். சரி, அதற்குப் பிறகாவது வந்து பார்த்தீர்களா? அதுவும் இல்லை. நிவாரணம் கொடுத்தீர்களா அதுவும் கிடையாது. இப்போது மட்டும் ஓட்டு கேட்க தெருத்தெருவாக எந்த முகத்துடன் வருகிறீர்கள்?” என்று அப்பகுதி வியாபாரிகள் நம்மிடம் குமுறினர்.  200 ரூபாயும் போச்சு! “எங்களுக்கு நீங்க உதவி தான் செய்யவில்லை. உபத்திரமாவது செய்யாமல் இருக்க வேண்டாமா? நீங்கள் வருவதால் இரண்டு நாளா வியாபாரம் செய்யவே போலீஸ்காரங்க விடல. பாதுகாப்பு காரணம் சொல்லி கடையை திறக்க விடல. கோயம்பேடு போயி ஆயிரம் ரூபாய்க்கு பூ வாங்கிட்டு வந்து அதை கட்டி விற்றால் 200 ரூபாய் கிடைப்பது பெரும்பாடு. அதுவும் போச்சு. எங்க பொழப்புல மண்ணள்ளி போட்டுட்டீங்களே நியாயமா?” என்று சாலையோர வியாபாரிகள் கேள்வி எழுப்பினர். சென்னையின் மிக மிக முக்கிய வர்த்தக பகுதியாக விளங்கிக் கொண்டிருக்கும் தியாகராயர் நகர் பகுதிக்கு பிரதமர் மோடி வந்ததால் கடைகள் மட்டும் மூடவில்லை. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அவசரத்திற்கு கூட செல்ல முடியவில்லை. ஆட்டோக்கள் கிடையாது. கொளுத்தும் வெயிலில் ரொம்ப தூரம் நடந்து சென்று பஸ் பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  “எங்களைப் போல ஏழை மக்களுக்குத் தான் பெரும் இழப்பு. நாங்க அன்றாடம் காய்ச்சிங்க. பொழப்புக்கு போய் கடையை திறந்தால் 500 ரூபாய் கிடைக்கும். அன்றைய தினம் வயிற்றுப்பாடு தீரும். மோடி வந்ததால் மூணு கடையை திறக்கல. வியாபாரமும் இல்ல. சாப்பாட்டுக்கும் வழி இல்லாம கஷ்டப்படுகிறோம். தெலுங்கு வருஷ பிறப்பும் அதுவுமா எங்க கடைகளை மூட சொல்லிட்டாங்க. அன்னைக்கு தான் ஒன்னு ரெண்டு வியாபாரம் ஆகும். அந்த வியாபாரம் மொத்தமா போச்சு..” - இதுதான் மக்களின் புலம்பலாக இருந்தது.

- சி. ஸ்ரீராமுலு