புதுதில்லி, மே 8 - நிலக்கரியை ஏற்றிச் செல்வதற்காக 1,100 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. நிலக்கரியைத் தோண்டி எடுப்பதிலும், அதனை போதிய அளவு இருப்பு வைப்பதிலும், மோடி அரசு காட்டிய அலட்சியம் காரணமாக, நாட்டின் மின்னுற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குஜராத், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா, பீகார், தெலுங்கானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நாளொன்றுக்கு குறைந்தது 3 மணிநேரம் முதல் அதிகபட்சம் 7 மணி நேரம் வரை கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது நாடு முழுவதும் மக்களிடையே பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி, எதிர்க்கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், மிகவும் காலந்தாழ்ந்த பிறகே, மாநிலங்களுக்கு கூடுதல் நிலக்கரியை விநியோகிக்கும் முடிவுக்கு ஒன்றிய பாஜக அரசு சென்றது. தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு ரயில்கள் மூலம் நிலக்கரியை விநியோகம் செய்யும் வேலையை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்கு அதிகமான எண்ணிக்கையில் ரயில்கள் தேவைப்படுவதாக கூறி, பயணிகள் ரயில்களை ரத்து செய்து அவற்றை சரக்கு ரயில்களாகவும் மாற்றியுள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 24-ஆம் தேதி வரை மட்டும் நாடு முழுவதும் 753 பயணிகள் மற்றும் அதிவேக ரயில்களை மோடி அரசு ரத்து செய்தது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, தற்போது வரை நாடு முழுவதும் பல்வேறு தடங்களிலும் செல்லும் பயணிகள் ரயில்களின் 1,100 பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 500 மெயில் மற்றும் விரைவு ரயில்களின் பயணங்களும், 580 பயணிகள் ரயில் பயணங்களும் அடங்கும் என்று ரயில்வே துறையே புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.