குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள பாஜக அரசின் மதவெறி அரசியலுக்கு முடிவுகட்டுவோம் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சூளுரைத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஒன்றிய பாஜக அரசு தனது தவறுகளை மறைக்க இந்தியாவை துண்டாடி குளிர்காய்ந்திட குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற பாஜக விற்கு போதிய வாக்குகள் இல்லாத நிலையில் இச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து நிறைவேற்றி அதிமுகவின் துரோகத்தை மறைக்கவோ, மறக்கவோ முடியாது. ஜனநாயக நாட்டின் தேர்தல் மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கான தன்மைகளைக் கொண்டதாக அமைய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக உயர்ந்த பண்புகளை முன்வைத்து தேர்தல் களம் அமைவதுதான் ஜனநாயகத்தின் ஆதாரமாகும். கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு அறிவித்தது போல தமிழக தி.மு.க. அரசும் தமிழ்நாட்டில் இச்சட்டத்தை அமலாக்க மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஒன்றிய பாஜக அரசே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலாக்குவதை உடனடியாக நிறுத்து, சட்டத்தை வாபஸ் வாங்கு என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கேட்டுக் கொள்வதோடு, இதற்கு எதிராக மத வேறுபாடின்றி ஒவ்வொரு இந்தியனும் ஒன்றிணைந்து களம்காணவும், ஒவ்வொரு இந்தியனின் சகல உரிமைகளையும், நலன்களையும் காக்க கரம் கோர்ப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாது போராடுவோம்!
தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மக்களின் கவனத்தை திசைதிருப்ப குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அமலாக்கத்தை அரசு அறிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கும், தமிழ் இந்துக்களுக்கும் அநீதி இழைக்கும் இந்தச் சட்டத்தை அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றிக் கொண்டது பாஜக. இச்சட்டம் கொண்டுவரப்பட்ட 2019 ஆம் ஆண்டிலேயே மக்கள் இதை எதிர்த்து இந்தியா முழுக்கப் பெரும் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடையும் சென்னையில் மாபெரும் மாநாட்டையும், மாநிலம் முழுக்கப் பல லட்சம் பேர் பங்கு கொண்ட மனிதச்சங்கிலி இயக்கத்தையும் அனைத்து ஜனநாயக இயக்கங்களின் ஆதரவோடு நடத்தியது. எனினும் இன்று அந்தப் பேராபத்து நடப்புக்கு வந்துள்ளது. இந்த அநீதிச் சட்டத்தை திரும்பப் பெற வைக்கும் வரை விடாது போராடுமாறு அனைத்து நியாய உள்ளங்களையும் அறைகூவி அழைக்கிறோம்.