புதுதில்லி, அக். 17 - உத்தரப் பிரதேச மாநிலத்தில் ‘உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையத்தின்’ (UPSSSC) முதல்நிலை தகுதித் தேர்வு (PET) கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த தேர்வுகள் காலை 10-12 மணி வரையிலும் பிற்பகல் 3-5 மணி வரையிலும் நடைபெற்றன. இந்நிலையில், தேர்வுகான மையங்கள் முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டிருந்தால் தேர்வை முடித்து வீடு திரும்ப இளைஞர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். லட்சக்கணக்கில் ரயில் நிலையங்களில் குவிந்த இளைஞர்கள் இடம் கிடைக்காமல், படிகளிலும், கம்பியை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டும் ஆபத்தான முறையில் பயணித்தனர். அப்படியும் கூட அனைத்து மாணவர்களும் தேர்வை எழுத முடியவில்லை. இந்த தேர்வுக்கு சுமார் 37 லட்சத்து 58 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், அவர்களில் 25 லட்சத்து 11 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். 12 லட்சத்து 46 ஆயிரம் பேர் - சுமார் 33 சதவிகிதம் பேர் தேர்வெழுத முடியவில்லை. மழை - வெள்ளம் காரணமாக உ.பி. மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் துண்டிக்கப்பட்டிந்த நிலையில், தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், ஆதித்யநாத் அரசு அதனை ஏற்கவில்லை. மறுபுறத்தில் தேர்வுக்கான ஏற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக போக்குவரத்து வசதிகளை செய்துதரவில்லை. இதனால் இளைஞர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதும், தேர்வெழுதியவர்கள் கடும் அலைக்கழிப்புக்கு ஆளானதும்தான் மிச்சம் என்றானது. இதுதொடர்பாக இளைஞர்கள் பகிரங்கமாகவே ஆதித்யநாத் அரசை விமர்சித்தனர். கொந்தளித்து பேட்டியளித்தனர். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகின.
இந்நிலையில், ஆதித்யநாத் அரசின் இந்த அலைக்கழிப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். “ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது இளைஞர்கள் வேலையில்லாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதை காண முடிகிறது. இதை கண்டும் காணாதது போல் பிரதமர் அமைதியாக இருக்கிறார்.” என்று ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், பாஜக எம்.பி. வருண் காந்தி ஆகியோரும் ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ளனர். “உத்தரப் பிரதேசத்தில் சில ஆயிரம் காலி இடங்களுக்கு 37 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் அதிகபட்சமாக 1 லட்சம் பேர் தேர்வானாலும் கூட மீதமுள்ள 36 லட்சம் பேர் வேலையில்லாமல்தான் இருப்பார்கள் என்பதை பாஜக-வும், யோகி ஆதித்யநாத்தும் ஒப்புக்கொள்வார்களா?” என்று கேட்டுள்ள ப. சிதம்பரம், “ஒன்றிய அதிகாரத்திலும், மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி என்று கூறிகொண்ட அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? உத்தரப் பிரதேசத்திற்கு இதுபோன்ற பயனற்ற இரட்டை என்ஜின் ஆட்சி வேண்டியதில்லை. மாறாக வேலை வாய்ப்பு, மத நல்லிணக்கம் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் திறமையான அரசாங்கமே தேவை” என்று தெரிவித்துள்ளார். ஆனால், “இவை யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் சிந்தனைக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல பாஜக எம்.பி. வருண் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “உத்தரப் பிரதேசம் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், 37 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் முதல்நிலை தகுதி தேர்வை (பி.இ.டி.) எழுதியுள்ளனர். மாணவர்களுக்கு வினாத்தாளுக்கு பதில் எழுவதை விட தேர்வு மையத்தை அடைவது பெரிய சவாலாக இருந்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை, போதிய போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஒருவேளை வான்வழி ஆய்வு தரையில் உள்ள பிரச்சனைகளை காட்டாதோ...?” என்று கிண்டலடித்துள்ளார்.