states

விளக்கமுறும் புகழோடு! - கோவி.பால.முருகு

உழைப்பாய் உழைப்பெல்லாம் ஊருக்கு-அதனால்
உயர்வு கிடைத்திடுமுன்  பேருக்கு!
பழுத்த பழமாவாய் பாருக்கு!-உன்னைப்
பாய்ச்சிடு நாட்டின் வேருக்கு!

தன்னலம் கருதாமல் வாழ்வாய்!-மக்கள்
தொண்டிலே மகிழ்ந்துநீ ஆழ்வாய்!
இடர்களை எதிர்த்திங்கு வெல்வாய்!-நாளும்
இல்லாதார்  உயர்வுக்கே செல்வாய்!

எத்தனை செயலுண்டோ செய்வாய்!-நாளும்
இத்தரை வாழ்க்கையை நெய்வாய்!
பத்தரை மாற்றான தங்கம்நீ!-எங்கள்
சித்தம் குளிர்வித்த அங்கம்நீ!

தொண்டுகள் உனக்குள்ளே ஊற்றாகும்!-செயல்
தூய்மையே உன்மூச்சுக் காற்றாகும்!
பண்புகள் உன்னெஞ்சின் நாற்றாகும்!-புகழ்
பரப்புவார் உனக்குயார் மாற்றாகும்!

வாழும் வாழ்க்கையில் போராடு!-நீ
வாழ்ந்திடு பொதுமைத் தேரோடு!
சூழும் அறிவெல்லாம் நீதேடு!-உன்
சொல்செயல் விளக்கமுறும்  புகழோடு!