states

img

கேரளம் உருவானதன் ஒருவாரக் கொண்டாட்டம் இன்று துவங்குகிறது

மதச்சார்பற்ற முகத்தை கேரளீயம் தெளிவுபடுத்தும்

முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளத்தின் தனித்துவத்தை உலகுக்கு தன்னம்பிக்கையுடன் எடுத்துரைக்க ‘கேரளீயம்’ விழா ஒரு வாய்ப்பு என்றும், கேரளத்தில் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடக்கும் கேரளீயம் (கேரளம் உருவான நாள்) விழா விவரங்களை செய்தியாளர்களிடம் முதல்வர் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நமது நாடு சாதி வெறி மற்றும் நிலப்பிரபுத்துவத்தில் இருந்து விடுபட்டு, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் வளர்ச்சிக் களமாக எப்படி மாற்றப்பட்டது என்பதை உலகம் அறிய வேண்டும். இங்கு வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். கேரளத்தின் சகோதரத்துவம் மற்றும் அன்பின் கலாச்சாரம் அதன் அனைத்து உணர்வுகளிலும் கொண்டாடப்பட வேண்டும். அதற்கான வாய்ப்பை கேரளம் தயார் செய்து வருகிறது. அதனை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

திருவனந்தபுரம், அக்.31- கேரளீயம் (கேரள மாநிலம் உருவான நாள்) 2023 இன் தொடக்க விழா நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா, நார்வே, கியூபா போன்ற நாடுகளின் தூதரக பிரதிநிதிகள், திரைப்பட நட்சத்திரங்கள் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஷோபனா, மஞ்சு வாரியர் மற்றும் தொழிலதிபர்கள் எம்.ஏ. யூசபலி, ரவிப்பிள்ளை, சுகாதாரத் துறையில் முன்னணி ஆளுமை, டாக்டர். எம்.வி.பிள்ளை உட்பட திரளானோர் பங்கேற்கின்றனர். கவடியார் முதல் கிழக்கு கோட்டை வரை 42 அரங்குகளில் கேரளீயம் அரங்கேறுகிறது. கேரளத்தின் முக்கிய அங்கமான கருத்தரங்குகள் நவம்பர் 2 முதல் 6-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளன. தினமும் மாலை 6 மணி முதல் கலைநிகழ்ச்சிகளும், கண்காட்சி, வர்த்தக கண்காட்சி, உணவுக் கண்காட்சி என மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெற உள்ளன.

புதிய கேரளத்தின் எதிர்கால வடிவத்தை தயாரிக்கும் நோக்கில் 5 இடங்களில் 25 கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இந்த கருத்தரங்குகள் கேரளத்தின் விவசாய தொழில் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி விவாதிக்கும். கேரளத்தில் நடக்கும் விவசாயம் தொடர்பான கருத்தரங்கில், வியட்நாமில் இருந்து காவ் டக் பாட் (சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலர் குழுத் தலைவர்) மற்றும் கிறிஸ் ஜாக்சன் (உலக வங்கியின் மூத்த விவசாயப் பொருளாதார நிபுணர்) ஆகியோரால் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. கேரளத்தில் பாலின நீதி, மூத்த குடிமக்கள் நலன் மற்றும் அவர்களின் பிரச்சனைகள், கேரளாவில் நில சீர்திருத்தம், மீன்வளத்துறை, தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் கல்வி போன்ற தலைப்புகளில் இந்த கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. கேரளத்தின் பொருளாதாரம் பற்றி சிங்கப்பூரில் உள்ள தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் வருகைப் பேராசிரியரான டாக்டர்.ராபின் ஜெஃப்ரி மற்றும் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், சர்வதேச மற்றும் பொது விவகாரங்களின் பேராசிரியர் பேட்ரிக் ஹெல்லர் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

25 கண்காட்சிகள்

சுகாதார முன்னேற்றங்கள் மற்றும் தொற்றுநோயை கேரளா எவ்வாறு சமாளித்தது என்பதும் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கருத்தரங்குகளில் பாஸ்டனில் ஹோவர்ட் டி.எச்.சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்-இன் சர்வதேச சுகாதாரத் துறை, ரிச்சர்ட் ஏ. காஷ், எம்.எஸ்.சுவாமிநாதன் ரிசர்ச் பவுண்டேஷன் சென்னை தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் மற்றும் பலர் பேசுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை குறித்த கருத்தரங்கில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார். உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் திலீப் ராதா, புலம்பெயர் சமூகம் பற்றி கத்தார் கலிபா பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பேராசிரியர். ராஜா ஆர். ஜுரைதினியும் பேசுவார். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் இணைந்து நடத்தப்படும் 25 கருத்தரங்குகளில் இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச ஆளுமைகள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளனர். கருத்தரங்குகள் பசுமை நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க உள்ளன. அனைத்து கருத்தரங்குகளும் சைகை மொழி விளக்கத்துடன் நேரடி ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கருத்தரங்கின் தேதி, நேரம், இடம், தலைப்பு, பேச்சாளர் தகவல், கருத்துக் குறிப்புகள் போன்ற கருத்தரங்குகள் பற்றிய அனைத்து தகவல்களையும் கேரளீயம் இணையதளத்தில் பார்க்கலாம்.