states

தொகுப்பூதிய - என்எம்ஆர் ஊழியர்களுக்கு பணிநிரந்தர ஆணை வழங்கிடுக!

சென்னை,ஜூன் 10- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜூன் 10 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் 34 பேர் உள்பட 205 பேர் பணியாற்றி வருகிறார்கள்.  இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் பிடித்தம் போக ரூ.3978 மட்டுமே பெற்றுக்கொண்டு மிகவும் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.  ஆனால், அதே நேரத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணியினை எந்த தொய்வுமின்றி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இந்த ஆண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படாத நிலையில் மிகவும் வேதனையில் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் , தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என்றும், காலியிடங்கள் ஏற்படுகிறபோது அந்த இடங்களில் இவர்கள்  பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்தார். அமைச்சரின் இந்த  அறிவிப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆறுதலாக உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி தொகுப்பூதியத்தில் பல்வேறு நிலைகளில் பணியில் உள்ள 205 தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.  அதேபோல், அதே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக (என்.எம்.ஆர்.) 140 பேர் பணியாற்றி வருகின்றனர். தாங்கள் நிச்சயமாக நிரந்தரப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கிடையில் பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட 140 தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.  முதலமைச்சர் மேற்கண்ட பிரச்சனையில் கவனம் செலுத்தி தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 205 பேர் மற்றும்  தற்காலிக ஊழியர்களாக (என்.எம்.ஆர்.) பணியாற்றும் 140 பேரையும் சேர்த்து 345 பேர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்திட தாங்கள்  உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.