புதுதில்லி, டிச. 23 - பிஎப்.7 வகை வைரஸானது, ஒமைக்ரான் வகையின் ஒரு திரிபுதான் என்றும், பெரிய அள விற்கான பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால், அது குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மூத்த விஞ்ஞானி ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவில், சீனாவில் இருந்து குஜராத்தின் பாவ் நகருக்குத் திரும்பிய தொழிலதிபர் ஒருவருக்கு ஒமைக்ரான் பி.எப்.7 திரிபு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறார். அவரது குடும்பத்தி னர், அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு பி.எப்.7 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் பிஎப். 7 வகை கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவில் முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடு களைக் கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக அவசரக் கூட்டத்தைக் கூட்டியும் ஆலோசனை மேற்கொண்டார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் மக்கள் ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த நடைபயணத்தை நிறுத்த வேண்டும் என்றும் மோடி அரசு கேட்டுக் கொண்டுள்ளது
இந்நிலையில் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் ஜெனிடிக் மற்றும் சொசைட்டியின் (Tata Institute for Genetics and Society - TIGS) இயக்குநரும், மூத்த விஞ்ஞானியுமான ராகேஷ் மிஸ்ரா பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஒமைக்ரான் வைரஸின் ஒரு வகை திரிபுதான் பி.எப் 7 வகை வைரஸ். இரண்டிற்கு பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. நம்மில் பெரும்பாலா னோர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தோம். ஆகவே பி.எப் 7 வகை வைரஸ் தீவிரம் குறித்து இந்தியா அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று தெரி வித்துள்ளார். இந்தியா முழுவதும் போடப்பட்ட தடுப்பூசி காரணமாக கொரோனாவை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்பு சக்தி இந்தியர்களுக்கு உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் அவர், “எனினும் முகக்கவசம் அணிவது, தேவை யற்ற கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவில் ஒமைக்ரான் பி.எப்.7 வைரஸ் தினமும் 10 லட்சம் பேருக்கு பரவி வருவதுடன், நாள்தோறும் 5 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். அடுத்த ஒரு மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சமாக உயரும், மார்ச் மாதத்தில் இது 42 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், “இந்தியா பல்வேறு வகையான கொரோனா தொற்றுக்களைப் பார்த்து கடந்து வந்திருக்கிறது. ஆனால், சீனா அப்படி அல்ல. அதனால்தான் அந்த நாட்டில் தொற்று அதிகமாக இருக்கிறது” என்று சீனாவில் தொற்று அதிகரிப்பதற்கான காரணத்தையும் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.