“ஒரு நாடு ஒரே தேர்தல்” சாத்தியக்கூறுகளை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தக் குழுவில் இடம் பெற காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். அமித்ஷாவுக்கு கடிதம் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய கடிதத்தில்,”பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அரசியலமைப்பு ரீதியாக சந்தேகத்திற்குரிய, நடைமுறை ரீதியாக சாத்தியமற்ற யோசனையை தேசத்தின் மீது திணிக்கும் திடீர் முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல். இது, அரசாங்கத்தின் மறைமுக நோக்கங்கள் குறித்து கடுமையான கவலையை எழுப்புகிறது. எனவே தான் இந்த ஆய்வுக்குழு கண் துடைப்பு என்று அஞ்சுகிறேன். மேலும் இக்குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். அவரை புறக்கணித்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயக முறையை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் செயல். இப்படியான சூழ்நிலையில் உங்கள் அழைப்பை நிராகரிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என கூறியுள்ளார்.