மஞ்சூர், ஜூன் 10- குந்தா பகுதியில் பசுந்தேயிலை வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளதால் கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் ‘கோட்டா’ முறை அமல்படுத்தப்பட்டது. நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் தேயி லை விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ள தால் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், மேற்குநாடு, நஞ்சநாடு உள்பட மாவட்டம் முழுவதும் 16 கூட்டுறவு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதுதவிர, 100க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் எஸ்டேட்டுகளுக்கு சொந்தமான தொழிற்சாலைகளும்உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குந்தா பகுதியில் பரவலாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயி களும் தங்களது தேயிலை தோட்டங்களில் உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக, தற்போது தோட்டங்களில் தேயிலை மகசூல் பெருமளவு அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து காணப் பட்ட நிலையில், தற்போது தினமும் 30 ஆயி ரம் முதல் 40 ஆயிரம் கிலோ வரை பசுந்தேயி லை வரத்து உள்ளதாக தொழிற்சாலைகள் தரப்பில் கூறப்படுகின்றன. இதையடுத்து, பெரும்பாலான கூட்டு றவு தொழிற்சாலைகளிலும் விவசாயிகளி டம் இருந்து பெறப்படும் பசுந்தேயிலை கொள் முதலில் ‘கோட்டா’ முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த நடைமுறையின் மூலம் விவசாய உறுப்பினர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு பசுந்தேயிலை மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இதனால், தேயிலை தோட்டங்களில் இருந்து அதிகப்படியான பசுந்தேயிலை பறிக்க முடியாமல் விவசாயிகளுக்கு வரு வாய் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும், அதிகப்படியான இலைகளை பறிக்காமல் செடிகளில் விட்டு வைப்பதால் இலைகள் முற்றலாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.