போர், வன்முறை, ஏகாதிபத்திய நடவடிக்கைகளால் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமடைந்து 2023 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 28.2 கோடி மக்கள் கடுமையான பஞ்சத்தில் தள்ளப்பட்டது ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக காசா மற்றும் சூடானில் இந்த பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இருண்ட காலம் உணவு நெருக்கடிகள் குறித்து சமீபத்தில் உணவுப் பாதுகாப்புத் தகவல் வலையமைப்பு (FSIN) வெளியிட்ட அறிக்கையின்படி பொருளாதார சரிவுகள், காலநிலை மாற்றம் ஆகியவை கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளது எனவும் 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.4 கோடி மக்கள் அதிகமாக இந்த பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான உலகளாவிய கண்ணோட்டத்தை “இருண்ட காலமாக “ அறிக்கை குறிப்பிடுகிறது. தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக 2023 ஆம் ஆண்டிலும் பஞ்சத்தில் தள்ளப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டு மேலும் அதிக மக்கள் பஞ்சத்தில் வீழ்ந்ததற்கு பாலஸ்தீனம் (காசா ), சூடான் உள்ளிட்ட 12 நாடுகளின் மோசமான நிலையே காரணமாக உள்ளது. குறிப்பாக 2022ஆம் ஆண்டு காசாவில் 6 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை பட்டினியின் விளிம்பில் இருந்தனர். அதுவே 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் காசா மீது போர் துவங்கியதாலும் போரின் தீவிரத்தை அமெரிக்கா திட்டமிட்டு அதிகரித்து வருவதாலும் காசாவில் மொத்தம் உள்ள 20 லட்சம் பேரும் கடுமையான பஞ்சத்தில் திட்டமிட்டு தள்ளப்பட்டுள்ளனர்.
பசியால் வாடும் குழந்தைகள்
உலக உணவு பேரழிவு அமைப்புடன் இணைந்து வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை யிலிருந்து, உணவுப் பாதுகாப்பற்றவர்களின் எண்ணிக்கை 10.8 கோடியில் இருந்து 28.2 கோடியாக உயர்ந்துள்ளதோடு பாதிக்கப் பட்ட மக்களின் எண்ணிக்கையும் 11 சதவீதத்தி லிருந்து 22 சதவீதம் என இருமடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளால் பொம்மை ஆட்சி நிறுவப்பட்டு பல ஆண்டுகளாக சுரண்டப் பட்டு வந்த ஆப்கானிஸ்தான், காங்கோ ஜன நாயகக் குடியரசு, எத்தியோப்பியா, நைஜீரியா, சிரியா, யேமன் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே உள்ள உணவு நெருக்கடிகள் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்த அறிக்கையின் துவக்க உரையிலேயே உலகம் முழுவதும் லட்சக்கணக்கான குழந்தைகள் பட்டினியால் சாகின்றன என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் போர், காலநிலை மாற்றம், பொரு ளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் இத்தனை கோடி மக்கள் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் மக்களின் வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதற்கு ஏற்ப பணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளமும் வறட்சியும்
எல் நினோ வானிலை நிகழ்வுகளால் கடுமை யான வறட்சி உருவாகும் என்பதோடு காலநிலை மாற்றத்தால் கடுமையான வெள்ளமும் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி கடுமையான பஞ்சத்தால் 20 நாடுகளைச் சேர்ந்த 13.5 கோடி மக்கள் மோதல் உள்ளிட்ட பாதுகாப்பின்மை சூழலில் உள்ளனர். வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற தீவிர கால நிலை மாற்றங்கள் 18 நாடுகளில் உள்ள 7.2 கோடி மக்களின் உணவுப் பாதுகாப்பின்மைக்கு முக்கியக் காரணமாக உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வீழ்ச்சி / முடக்கத்தால் 21 நாடுகளில் உள்ள 7.5 கோடி மக்கள் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். குறைந்த வருமானம் கொண்ட மற்றும் இறக்குமதிகளைச் சார்ந்துள்ள நாடுகளின் உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறை யாமல் உள்ளது. அதே நேரத்தில் அதிகக் கடன்கள், பணவீக்க பிரச்சனைகளை சரி செய்ய அரசுகளின் போதிய முயற்சியின்மையும் இந்த பஞ்சத்திற்கு காரணமாக உள்ளது.