சென்னை,ஏப்.20- தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைக்க திட்டமிட்டால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சட்டப்பேரவையில் புதன்கிழமை(ஏப்.20) நடந்த கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம். சின்னத் துரை, “கந்தர்வக்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்றார். இதற்குப் பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் சென்னை, திருச்சி, வேலூர், கோவை என்று 4 இடங்களில் கோளரங்கங்கள் உள்ளன. திருச்சி மாவட்டத்தில் அண்ணா கோளரங்கம் உள்ளது. சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அந்த கோளரங்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோளரங் கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஒரு கோளரங்கம் அமைக்க ரூ.15 கோடி செலவு ஆகும். எனவே, புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்க்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்கும் கருத்துரு அரசின் பரிசீலனையில் இல்லை” என்றார். “தென் மாவட்டங்களில் ஒரு கோளரங்கம் கூட இல்லை. எனவே மதுரையில் ஒரு கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படுமா? என அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர், “புதிய கோளரங்கம் அமைக்க முடிவு செய்தால் மதுரையில் அமைக்க முக்கியத்து வம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.