கோலாலம்பூர், ஜூலை 25- இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரலிடம் மனித உரிமை குழு ஒன்று புகார் அளித்திருக்கிறது. இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் ஐ.டி.ஜே.பி. என்ற அமைப்பு புகாரினை அளித்திருக்கிறது. கடந்த 2009-ஆம் ஆண்டு கோத்தபய இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்த போது ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறி இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி எதிரொலியாக இலங்கையில் இருந்து கோத்தபய சிங்கப்பூரு க்கு தப்பித்து வந்திருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தென்னாப்பிரிக்காவை தலமாக கொண்ட ஐ.டி.ஜே.பி. கேட்டுக்கொண்டுள்ளது. கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யக்கோரி ஐ.டி.ஜே.பி. அமைப்பின் சார்பில் ஜூலை 23-ஆம் தேதி புகார் கடிதம் ஒன்று பெறப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கும் சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம், மேலதிக விவரங்களை தர மறுத்துவிட்டது. ஏற்கனவே கோத்தபயவுக்கு அடைக்கலம் தர மறுத்ததுடன் 15 நாட்களில் நாட்டை விட்டு வெளியேற சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தற்போது சிங்கப்பூரில் உள்ள கோத்தபய, அமெரிக்காவின் ஆதர வுடன் சவூதி அரேபியாவில் தஞ்சமடைய தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.