states

குட்கா முறைகேடு வழக்கு திருத்திய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு கூடுதல் அவகாசம்

சென்னை,பிப்.17- குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையிலுள்ள பிழையை திருத்தம் செய்யும் பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் சிபிஐக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு  தடை விதிக்கப்பட்டது. கடந்த  2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையி னர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்ட தாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இதில் அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு  உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரி களின் பெயர்களும் அடிபட்டன.  இந்நிலையில், குட்கா ஊழல் தொடர் பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி  உத்தரவிட்டது.  இந்நிலையில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட  6 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அமைச்சர் மற்றும் டிஜிபி என  வேறுயாருடைய பெயர்களும் இடம்பெற வில்லை.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 19 அன்று அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து 11 பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள  சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும்  அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்ட பட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து  முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.  இந்த வழக்கு வெள்ளியன்று (பிப்.17) சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை எனவே கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை யடுத்து வழக்கு விசாரணையை மார்ச்               20 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.