அகமதாபாத், மே 6 - மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 100 இஸ்லா மியக் குடும்பங்கள், தங்களைக் கருணைக்கொலை செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மனுவில் அவர்கள் மேலும் கூறியிருப்பதாவது: “குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள கோசபரா துறைமுகத்தில் படகுகளை நிறுத்த, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடை உத்தரவால், மீன்பிடி படகுகள் மற்றும் உரிமம் இருந்தும் தங்களால் மீன்பிடிக்க முடியவில்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆளுநர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. எனவே, வருவாய் இன்றி தவித்து வரும் தங்களை கருணை கொலை செய்ய வேண்டும்” என்று கோரியுள்ளனர். இவ்வாறு அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.