states

விருதுநகர் சந்தை பாசிப் பருப்பு, கடலை எண்ணெய், மல்லி விலை உயர்வு

விருதுநகர், ஜூலை 23 - விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், பாசிப் பருப்பு, லையன் மல்லி ஆகியவற்றின் விலை திடீரெ உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வாரம் கடலை எண்ணெய் 15 கிலோ ரூ.2950 என விற்கப்பட்டது. இந்த வாரம் திடீரென டின் ஒன்றுக்கு ரூ.50 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு  டின்  கடலை எண்ணெய் ரூ.3ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. பாமாயில் 15 கிலோ கடநத வாரம் ரூ.1400க்கு விற்பனை யானது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.10 வரை குறைந்துள்ளது. எனவே, பாமாயில் ரூ.1390 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. லையன் மல்லி 40 கிலோ ரூ.2800 முதல் 3200 வரை கடந்த வாரம் விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.400 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.3200 முதல் 3500 வரை விற்பனையாகிறது. அதேவேளை தமிழகத்தில் நாட்டு மல்லி விளைச்சல் அதிகரித்து, தற்போது சந்தைக்கு வரத்து துவங்கியுள்ளதால் அதன் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது கடந்த வாரம் 40 கிலோ மல்லி (நாடு வகை) ரூ.3ஆயிரம் முதல் ரூ.3400 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் வரத்து அதிகரிப்பால் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 வரை குறைந்து தற்போது ரூ.2500 முதல் 3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. பாசிப்பருப்பு கடந்த வாரம் 100 கிலோ ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது இந்த வாரம் திடீரென மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலை புண்ணாக்கு கடந்த வாரம் 100 கிலோ ரூ.5700 என்ற விலைக்கே விற்கப்பட்டது. இந்த வாரம் திடீரென ரூ.300 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மூட்டை ஒன்று ரூ.6 ஆயிரததிற்கு விற்கப்படுகிறது. அத்தியாவசிய உணவுகள் தயாரிக்கும் பொருட்களான பாசிப் பருப்பு, மல்லி, கடலை எண்ணெய் போன்றவற்றின் விலை உயர் வால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிற அத்தியா வசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும்ஏற்படவில்லை.