கட்சித் தலைவர் பதவி பரூக் அப்துல்லா அறிவிப்பு ஸ்ரீநகர், நவ.19- தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை அறிவித்தார். தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். புதிய தலைவர் தேர்தல் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறும். கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம். இது ஒரு ஜனநாயகப் பூர்வமான இயக்கம் மட்டுமல்ல; இது ஜனநாயக நடவடிக்கையும் ஆகும் என்றார். 85 வயதான பரூக் அப்துல்லா கட்சியின் புரவலராக பொறுப்பேற்றார். தற்போது கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் உமர் அப்துல்லா புதிய தலைவராக வரலாம் என பிடிஐ தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பரூக் அப்துல்லா, 1983-ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய மாநாட்டு கட்சித் தலைவராக பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பவும், அனைத்து சமூகத்தினரும் அச்சமின்றி வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப் போவ தில்லை என உமர் அப்துல்லா ஏற்கனவே கூறிவிட்டார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.