states

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது?

அரசு நிர்வாகத்தையே இனவாத அடிப்படையில் பிளவுபடுத்திய பாஜக

இம்பால், ஜூன் 21 - மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறை கட்டுக்குள் அடங்காமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கு விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த மே 29 முதல் ஜூன் 1 வரை நான்குநாட்கள் மாநிலத்தில் முகாமிட்டும், மாநில டிஜிபி-யை மாற்றியும், 50 ஆயிரத்திற்கும் அதிக மான பாதுகாப்பு படையினரை நிறுத்தியும் வன்முறையை தடுக்க முடியவில்லை. அரசு நிர்வாகம், பாதுகாப்பு படைகளே இனவாத அடிப்ப டையில் இரண்டு தரப்பாக மாறி நிற்கின்றன. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352(1)-ன்படி “போர் அல்லது வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதக் கிளர்ச்சியால் இந்தியாவின் அல்லது அதன் பிரதேசத்தின் ஏதேனும் ஒரு பகுதியின் பாது காப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கடுமையான அவசர நிலை நிலவுகிறது என்று குடியரசுத் தலைவர் உணர்ந்தால் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம். பிரிவு 356-ன்படி மாநிலங்களில் அரசியலமைப்பு இயந்திரம் தோல்வியுற்றால், பிரிவு 355-ன்படி அரசிய லமைப்பின் விதிகளின்படி மாநில அரசாங்கத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். தற்போது அந்த கட்டத்தில்தான் மணிப்பூர் உள்ளது. இதனை மணிப்பூர் எதிர்க்கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்திலும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்தப் பின்னணியிலேயே மணிப்பூரில் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடரும் படுகொலைகள்

அந்தஸ்து தருகிறேன் என்று கூறி, ஆளும் பாஜக பற்றவைத்த நெருப்பு, மெய்டெய் சமூகத்தின ருக்கும், குக்கி பழங்குடியினருக்கும் இடையிலான மோதலாக மாறி, 50 நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை 120-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்து விட்டனர். ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுதவிர வீடுகள், கடைகள், வாகனங்கள், தேவாலயங்கள், கோயில்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பாஜக ஆதரவு மதவெறிக் குழுக்கள் இருப்ப தாக குக்கி சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம் சாட்டினர். கடந்த வாரம், குண்டுக் காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி,  அவரது தாய் மற்றும் அவரது உறவினர் என 3 பேரும் பாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் யார் என்று விசாரித்து, அவர்கள் கிறிஸ்தவர்கள் எனத் தெரிந்து, ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்தது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தனர்.  காங்போக்பி மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களின் எல்லையில் சங்கைதெல் அருகேயுள்ள கோகன் கிராமத்தில், வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.  மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள காமென்லோக் என்ற கிராமத்தில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் நடத்திய குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.

தாக்கப்படும் பாஜக தலைவர்களின் வீடுகள்

இவை தவிர மே 28 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ  ரஞ்சித் சிங்கின் வீடு தாக்கப்பட்டது. செரோ கிராமத்தில் உள்ள எம்எல்ஏ ரஞ்சித்தின் வீட்டை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. ஜூன் 8 அன்று பாஜக எம்எல்ஏ சொரைசம் கேபி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது. பைக்கில் வந்த இருவர், வீட்டில் வெடிகுண்டை வீசினர். ஜூன் 14 அன்று, இம்பாலின் லாம்பேல் பகுதியில் உள்ள மாநிலத் தொழிற்துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் அதிகாரப்பூர்வ பங்களா தீ வைத்து எரிக்கப்பட்டது. இம்பாலில் உள்ள  பாஜக எம்.பி.யும், ஒன்றிய வெளியுறவுத்துறை மற்றும் கல்வித்துறை இணை அமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, பங்  களாவின் இரண்டு தளங்களும் தீக்கிரையாக்கப் பட்டன. 2 நாட்களுக்கு முன்பு துப்பாக்கித் தாக்கு தலில் பாதுகாப்பு படை வீரர் காயம் அடைந்தார்.  இந்நிலையில் செவ்வாயன்று இரவும் 2 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் கிழக்கில் உள்ள தாங்ஜிங்கில் இரவு 11.45 மணியளவில் ஒரு கும்பல் 15 முதல் 20 ரவுண்டுகள் வரை துப்பாக்கியால் சுட்டது. செல்ஜன் மற்றும் சிங்டா பகுதியில் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.

குக்கி - மெய்டெய் எம்எல்ஏ-க்கள் மோடிக்கு கடிதம்

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன வென்றால், மாநில அரசும், பாதுகாப்புப் படை யினருமே இரண்டு தரப்பாக மாறியிருக்கின்றனர் என்பதுதான். குக்கி பழங்குடி மக்கள் மீது மாநில காவல்துறை திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக அச்சமூகத்தை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  அதேபோல, குக்கி சமூகத்தை சேர்ந்த கிளர்ச்சி யாளர்களுக்கு அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவு வீரர்கள் உதவுவதாக மெய்டெய் சமூக மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் மத்திய பாதுகாப்பு படைகளை ஒரே சீராக நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்த வேண்டும்; குக்கி சமூக எம்எல்ஏ-க்கள் மற்றும் மெய்டெய் சமூக எம்எல்ஏ-க்களுக்கு இடையே ஒரு  சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மெய்டெய் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-க்களும் 9 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கரம் ஷியாம் சிங், தோக்சோம் ராதேஷ்யாம் சிங், நிஷிகாந்த் சிங் சபம், குவைரக்பம் ரகுமணி சிங், ப்ரோஜென் சிங், ராபிந்த்ரோ சிங், ராஜன் சிங், கெபி தேவி மற்றும் ராதேஷ்யாம் ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு அரசு, பாதுகாப்பு படையினர் என நிர்வாகமே பிளவுபட்டுள்ளதால், பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, அதிகாரத்தில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது என்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போது வன்முறை குறையாததற்கு காரணமும் அதுதான் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.  எனவே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதுதான் தற்போதைய தீர்வாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதனால், விரைவில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மோடிக்கு எதிராக வாஷிங்டனில் போராட்டம் இதனிடையே, அமெரிக்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற் கொண்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக ஜூன் 22 அன்று, வாஷிங்டனில் உள்ள லாபாயேட் பூங்காவில் போராட்டம் நடத்த மெய்டெய் சமூக அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.