இ.கே.நாயனார் நகர்(கண்ணூர்), ஏப்.11- தாய்நாட்டிற்காகப் போராடிக் கொண்டி ருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப் பாடு தெரிவித்து சிபிஎம் அகில இந்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு
கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக தாய்நாட்டிற்காகப் போராடிக் கொண்டி ருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு தனது ஒருமைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 23ஆவது மாநாடு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறது. 2018 மார்ச் 30இலிருந்து பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து பல கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தினர். கொரோனா வைரஸ் பெருந் தொற்று உலகைப் பீடிக்கும் வரையிலும், அதாவது 2020 வரையிலும் அவர்கள் இப்போராட்டங்களைத் தொடர்ந்தனர். இஸ்ரேல் அரசாங்கம் 260க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்துள் ளது. பாலஸ்தீனர்களைக் கொல்வது நாள்தோறும் நடைபெறும் விஷயமாக மாறியிருந்தது. அமெரிக்கா, ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகர் என அங்கீகரித்து, தன் தூதர கத்தை அங்கே மாற்றிய பின்னர், இஸ்ரேல் பாலஸ்தீனர்களைத் தாக்குவது மேலும் அதிகரித்தது. அமெரிக்கா வெளிப்படை யாக தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல், தங்கள் நாட்டை “யூத தேச நாடு” (“Jewish Nation State”) என்று பிரகடனம் செய்து சட்டம் நிறைவேற்றி யிருக்கிறது. இந்தச் சட்டமானது இஸ்ரேலில் 21 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கின்ற அராபிய பாலஸ்தீனர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மறுதலித்து, அவர்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக மாற்றி இருக்கிறது.
பாலஸ்தீனத்தின் உரிமை மறுப்பு
ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகர் என்று பிரகடனம் செய்திருப்பது, ஐ.நா. தீர்மா னத்திற்கு எதிரான செயலாகும். இந்தச் சட்டமானது அதிகாரப்பூர்வமாக, 1967 எல்லை களை ஏற்கவோ அல்லது கிழக்கு ஜெரு சலத்தை பாலஸ்தீனத்தின் தலைநகர் என அறிவிக்கவோ மறுக்கிறது. இது பாலஸ்தீனத் தின் உரிமையை மறுப்பதாகும். கிடைத்திருக்கிற தகவல்களின்படி பாலஸ்தீனர்களுக்கு கல்வி, வீட்டுவசதி, சுகா தாரப் பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறை களில் பாகுபாடு காட்டும் விதத்தில் சுமார் 60 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2022இல் ஐ.நா. ஸ்தாபனம், பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப் பது தொடர்பாக, “நவீன உலகில் நீண்ட காலத்திற்கு அத்துமீறிய ஆக்கிரமிப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறது. ஐ.நா. பொது மன்றமும் இஸ்ரேலைக் கண்டித்திருக்கிறது.
யூத தேசியவெறியை ஆதரிக்கும் பாஜக ஆட்சி
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், ஐ.நா.மன்றத்தில் முதன்முறையாக இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வாக்களிப்பதிலிருந்து தன்னை தவிர்த்துக்கொண்டுள்ளது. பாஜக அரசாங்கமும், அதன் மூளையாகச் செயல்படும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் இயற்கையாகவே யூததேசிய இனத்திற்கு (Zionism) ஆதரவானவர்களே. ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், வகுப்பு வாதத்திற்கு எதிராகவும் நாம் மேற்கொண்டி ருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதி யாக தாய்நாட்டுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்துக்கொள்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு மீண்டும் வலி யுறுத்துகிறது. இந்திய அரசாங்கம், இஸ்ரேலுடன் கொண்டுள்ள அனைத்து ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று கோருகிறது. கிழக்கு ஜெருசலத்தைத் தலைநகராகக் கொண்டு 1967 எல்லைகள் அடிப்படையில் பாலஸ்தீன அரசை உடனடியாக நிறுவ வேண்டும் என்றும் மாநாடு கோருகிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.