states

ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் உதயமானது

புதிய தேசிய கல்விக் கொள்கை உருவான காலம் தொட்டே இதில் வெகு கவனமாக செயல்பட்டு, எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள் உட்பட அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சி சென்னையில் ஆகஸ்ட் 19 அன்று கூட்டம் நடைபெற்றது. அரசியல் சாசனம் முன் வைக்கும் மாண்புகளான ஜனநாயகம், சமத்துவம், மதச்சார்பின்மை, அறி வியல் கண்ணோட்டம் போன்றவற்றை உள்ளடக்கிய கல்விக் கொள்கையை கொண்டு வர, கல்வியில் அக்கறை கொண்ட அனைத்து இயக்கங்களையும், கல்வியாளர்களையும் ஒருங்கிணைத்து, ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் இக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ஐ திரும்ப பெற்றிட வேண்டும்; ஜனநாயக மதச்சார்பற்ற அறிவியல் சார் கல்விக் கொள்கையை உருவாக்கிட வேண்டும் என்ற முழக்கங்களை முன் வைத்து; இளைய தலைமுறையை, இந்தியாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உறுதி ஏற்றுள்ள இக்கூட்டியக்கத்தை ஆசிரியர் சங்கங்கள், ஜனநாயக அமைப்புகள், கல்வியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய கல்வி யாளர்கள் குறிப்பிட்ட அம்சங்கள் வருமாறு: உலகமே கொரோனா பெருந்தொற்றில் உயிரி ழப்பு, வருமான இழப்பில் தடுமாறி கொண்டிருந்த போது, இந்தியாவில் சத்தமின்றி புதிய தேசிய கல்விக் கொள்கை (2020) நடைமுறைக்கு வந்தது. வருங்கால தலைமுறையை வடிவமைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இக்கொள்கை நாடாளு மன்றத்தில் கூட விவாதத்திற்கு வைக்கப்படவில்லை. இதன் வார்த்தை ஜாலங்களைக் கடந்து உண்மை பொருளைத் தேடினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியச் சுதந்திரம் பவளவிழா கண்டபின்னும், அனைவருக்கும் ஆரம்பக் கல்வி சாத்தியம் ஆகவில்லை. ஆனால், ஏற்கனவே உள்ள அரசு பள்ளிகளை மூடும் பணியை புதிய தேசிய கல்விக் கொள்கை முடுக்கி விட்டுள்ளது. இந்த பள்ளி மூடல் கொள்கைக்கு, உள்ளடங்கிய கிராமங்கள், மலை உச்சி என எதுவும் விதிவிலக்கு இல்லை.

நாடு முழுவதும் இருக்கும் கல்லூரிகள் அனைத்தும், பட்டம் தரும் தன்னாட்சி கல்லூரி களாக மாற்றப்பட உள்ளன. பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாகிவிட்ட நிலையில், உயர் கல்வியில் வணிகமயம் மேலும் உச்சம் தொடும் வாய்ப்புகள் வாரி வழங்கப்படுகின்றன. தொழில் கற்பிப்பு என்ற பெயரில் குலக்கல்விக்கு அடி போடப்படுகிறது. மழலைப் பருவக் கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி, வயது வந்தோர் கல்வி வரை ஒட்டு மொத்த மாக மையப் படுத்தப்படுகிறது. பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மத்திய பட்டியலுக்கு முழுமையாக போய்விடுமோ என்கிற அச்சம் தோன்றுகிறது. மாநில கல்வி கவுன்சில் வெறும் தலையாட்டி பொம்மையாக மாறும் அபாயம் உள்ளது. ஒன்றிய அரசின் கடந்த கால நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே கலாச்சாரம் உள்ளிட்ட முழக்கங்கள் இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்கக் கூடியவை. தேசிய கல்விக் கொள்கையின் பல இடங்களில் இடம் பெறும் ‘இந்தியத் தன்மை’ சனாதனத்தை தூக்கி நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மதச்சார்பின்மை, சமூக நீதி, ஜனநாயகம் உள்ளிட்ட வார்த்தைகள் தேடினாலும் கிடைக்கவில்லை. இது புதிய கல்விக் கொள்கை அல்ல; இதுவரை கல்வியில் கிடைத்த முன்னேற்றத்தை பின்னோக்கித் தள்ளும் கொள்கை. இதனை ஒன்றிய அரசு திரும்பப் பெறுவது தான் நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளாராக தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, நிதித் காப்பாளராக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ச.மயில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் கல்வியாளர் நா.மணி, இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, பி.சுகந்தி (அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்), கே.சி.கோபி குமார் (இந்திய தொழிற்சங்க மையம்), கென்னடி (இயேசு சபை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்), ஜே.காந்திராஜன், (ஏயுடி மாநிலத் தலைவர்), டி.டெய்சி (ஐசிடிஎஸ் மாநில பொதுச் செயலாளர்) ஆகியோரைக் கொண்ட வழிகாட்டும் குழுவும் அமைக்கப்பட்டது. செயலாளரைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் உருவாக்கப்பட்டது. ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்ளும் சங்கங்கள்/ அமைப்பு சார்பில் அதன் தலைவர் அல்லது சங்கங்கள், அமைப்புக்கள், கல்வியாளர்கள் ஆகியோரை இந்தக் கூட்டியக்கத்தில் இணைத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டியகத்தின் பிரதான முழக்கங்களை முன் வைத்து இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று (02/10/23) சென்னையில் மாபெரும் மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்துள்ளது.