பொள்ளாச்சி, மே 23- பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரியத் துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. தேங்காயிலிருந்து பிரித்து உற்பத்தி செய்யும் கொப்ப ரைகளை, ஒழுங்குமுறை விற்பனைக் கூட நிலையங்களிலும், வெளி மார்க்கெட்டிலும் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். சில நேரங்களில் அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு கொப்பரைக்கான உரிய விலை இல்லாததால், வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளதால், வெளிமார்க்கெட்டில் கொப்பரை விலை சரியத் துவங்கியது. வெளிமார்க்கெட்டில் கொப்பரைக்கு உரிய விலை இல்லாததால், அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் விவசாயிகள் கொண்டுவரும் கொப்பரை விலை குறைய துவங்கியதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.35 வரை இருந்தது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.20 முதல் அதிகபட்சமாக ரூ.25 வரையே விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தி அதிகரித்ததால் அதன் விலை சரிவடைந்தது. தற்போது ஒரு கிலோ கொப்பரை முதல் தரம் அதிகபட்சமாக ரூ.90 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.72 வரை என குறைவான விலைக்கு போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.