ரேபரேலி, ஏப். 21 - சாதிவெறிக் கும்பல் ஒன்று, தலித் சிறுவனை அடித்து உதைத்து, கால்களை நக்கவைத்து, சுற்றி நின்று கைதட்டி சிரித்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஜகத்பூர் நகரத்தில் வசித்து வந்தவர் 15 வயது தலித் சிறுவன். பத்தாம் வகுப்பு படித்து வரும் இந்தச் சிறுவனுக்கு தந்தை இல்லை. அவர் இறந்துவிட்டதால் தாயின் வருவாயை வைத்தே குடும்பம் நடந்து வந்துள்ளது. சிறுவனின் தயார், அங்குள்ள சாதி இந்துக்களுக்குச் சொந்தமான வயல்களில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், தனது தாய் செய்த வேலைக்கான கூலியை, சாதி இந்துக்கள் தராமல் அலைக்கழித்து வந்ததால், மனம் வெதும்பிய தலித் சிறுவன், சம்பந்தப்பட்டவர்களிடம் சென்று கூலியைத் தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாதிவெறிக் கும்பல்தான், அந்த சிறுவனை அடித்து உதைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், தலித் சிறுவனை சாதிவெறிக்கும்பல் ஒன்று அடித்து உதைக்கிறது. சிறுவனின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டுகிறது. மேலும், சிறுவன் பயந்து நடுங்கி கீழே உட்கார்ந்திருப்பதை பார்த்து சுற்றி நின்று கொண்டு கையை தட்டி சிரிக்கிறது. அதன்பின்னர் ஒருவன் பைக்கில் உட்கார்ந்து கொண்டு, அந்த சிறுவனை தனது கால்களை நக்கச் சொல்ல, தலித் சிறுவனும் பயந்து நடுங்கிக்கொண்டே அந்த சாதிவெறியனின் காலை நக்குகிறார். இதனை அந்த சாதிவெறிக் கும்பலே வீடியோவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த கொடூரம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதியன்று நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக தலித் சிறுவன், தனது தாயாருடன் கோட்வாலி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். எனினும், சிறுவன் தாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் கண்டனங்களுக்கு உள்ளான பின்னரே உ.பி. போலீசார் 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலித் சிறுவனை அவனது நண்பர் மோட்டார் சைக்கிளில் ராம்லீலா மைதானத்திற்கு அழைத்துச் சென்ற சாதிவெறிக் கும்பல், பின்னர் அவரை சலோன் சாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கிருந்து வேறு சில இளைஞர்கள் அவரை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.